குண்டும் குழியுமான சாலைகளால் விபத்துகள்-ஜெ
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக எவ்வித பராமரிப்பும் இன்றி கிடக்கின்றன. இவை தான் இது போன்ற சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்று
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளி வாகனம் குளத்தில் கவிழ்ந்து, ஒரு ஆசிரியை மற்றும் 9 குழந்தைகள் நீரில் மூழ்கி மரணமடைந்த செய்திகேட்டும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கி 20 குழந்தைகள் படுகாயமடைந்த செய்தி கேட்டும் மிகுந்த துயரமும் மனவேதனையும் அடைந்தேன்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை மாநில அரசு கண்காணிக்கவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக எவ்வித பராமரிப்பும் இன்றி கிடக்கின்றன. இவை தான் இது போன்ற சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம்.
சாலைகளை செப்பனிடவும், பராமரிக்கவும், திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதாரண்யம் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அனுபவம் வாய்ந்த டிரைவர்கள்-சரத் கோரிக்கை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளி வாகனங்கள் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு, தகுந்த நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். அனுபவம் வாய்ந்த டிரைவர்களை பணியமர்த்த வேண்டும்.
அரசு கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களை இணைக்கும் சாலைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். சாலை விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications