மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் விரிசல்-பல ரயில்கள் தாமதம்
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தண்டவாளம் சீர் செய்யப்பட்ட பின் இயக்கப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்தன.
மதுராந்தகம்-கருங்குழி இடையே இன்று காலை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததைப் பார்த்த ரயில்வே ஊழியர் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தந்தார்.
இதையடுத்து சென்னை நோக்கி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி- நாகர்கோவில் சிறப்பு ரயில், சேது எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
விரிசல் சரி செய்த பின் சுமார் 2 மணி நேரத்துக்குப் பின்னர் தான் ரயில் சேவை சீரானது.
இதனால் பல ரயில்கள் தாமதமாக இயங்கின.
பாண்டியன், நெல்லை, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த விரிசலுக்கு முன்பாக கடந்து சென்று விட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து சேர்ந்துவிட்டன.
ஆனால், அதன்பிறகு வந்த ரயில்கள் தாமதமாகின.
கோவை-சென்னை சிறப்பு ரயில்கள்:
இந் நிலையில் சென்னையில் இருந்து வரும் 11ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் ஜனவரி மாதம் 1ம் தேதி வரை இயக்கப்படும்.
சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இச்சிறப்பு ரயில்கள், அடுத்த நாள் காலை 6.50 மணிக்கு கோவை சென்றடையும்.
அதேபோல, கோவையில் இருந்து வரும் 12ம் தேதி முதல், சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில் ஜனவரி 2ம் தேதி வரை இயக்கப்படும்.
கோவையில் இருந்து 9.15 மணிக்கு புறப்படும் இச்சிறப்பு ரயில்கள், அடுத்த நாள் காலை 5.15 மணிக்கு சென்னை வந்தடையும்.
பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.