ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டார்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இன்று மேலும் ஒரு இந்திய மாணவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 1400 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் ஆஸ்திரேலிய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். ஆஸ்திரேலிய அரசும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவதாக உறுதி அளித்தது.
எனினும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று காலை மெல்போர்ன், ப்ரன்ஸ்விக் வெஸ்ட் சாலையில் 23 வயது இந்திய மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கோலியர் கிரெசன்ட் என்ற இடத்தில் தனது கேர்ள் ஃபிரண்டின் வீட்டின் முன்பாக டாக்ஸியை நிறுத்தி்விட்டு, காத்திருந்தபோது அடையாளம் தெரியாத ஒரு கும்பல், மாணவரை தாறுமாறாக தாக்கியுள்ளனர்.
டாக்சி டிரைவர் தகவல் கொடுத்ததும் மாணவரின் கேர்ள் ஃபிரண்ட் கீழே ஓடிவந்துள்ளார். அப்போது மாணவன் மார்பு மற்றும் வயிற்றில் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தார். மாணவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, அவர் உடனடியாக போலீசில் புகார் செய்துள்ளார்.