For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரீட்டா ஆர்வ கோளாறு-சிக்கலில் ராகுல், பைலட்

By Staff
Google Oneindia Tamil News

லக்னெளா: ஆர்வக் கோளாறில் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவி ரீட்டா பகுகுணா பேசிய பேச்சால், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கும் அவரது ஹெலிகாப்டரை இயக்கிய பைலட்டுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேற்று உ.பி. மாநிலம் சித்தாப்பூர் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தார் ராகுல் காந்தி. மாலை மிகக் குறைந்த வெளிச்சமே இருந்த நிலையில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

இது இந்திய விமானத்துறை விதிகளுக்கு முரணானது. வெளிச்சம் குறைவாக இருப்பதால் அங்கு தரையிறக்க முடியாது என்று பைலட் கூறியும், ராகுல் சொன்னதால் அவர் தரையிறக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய ரீட்டா, மக்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உயிரைப் பணயம் வைத்து குறைந்த வெளிச்சம் இருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டரை இறக்கி ஹீரோ போல நடந்து கொண்டுள்ளார் ராகுல் காந்தி என்று சொல்லி புளகாங்கிதம் அடைந்தார்.

எப்படா ராகுல் காந்தியை மடக்கலாம் என காத்துக் கொண்டிருந்த உ.பி. அரசுக்கு இது பெரிய வாய்ப்பாக அமைந்து விட்டது. ராகுல் காந்தி எப்பவுமே இப்படித்தான். பாதுகாப்பு நியதிகளை அவர் மதிப்பதே இல்லை. அவருக்கு ஒன்று ஆகி விட்டால் யார் பொறுப்பு என்று மாயாவதி அரசு பாய்ந்துள்ளது.

அதுபோதாதென்று இப்போது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹெலிகாப்டரை செலுத்திய பைலட், துணை பைலட் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. அந்த பைலட்டுக்கு தடை போட்டுவிட்ட ஆணையம் அவரை விசாரணைக்காக டெல்லிக்கு வரவழைத்துள்ளது.

ஆனால் இந்த சர்ச்சைக்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். ரீட்டா பகுகுணாவின் பேச்சு பொறுப்பற்றது, அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

ரீட்டா பகுகுணா பைலட் அல்ல, வானிலை நிபுணரும் கிடையாது. அவருக்கு எதுவும் தெரியாது. நான் பயிற்சி பெற்ற ஒரு பைலட். நான் கட்டாயப்படுத்தி ஹெலிகாப்டரை இறங்கச் சொல்லவில்லை.

விமானி மிகவும் திறமை வாய்ந்தவர். அவருக்கு வெளிச்சம் குறைவு, வெளிச்சம் அதிகம் என்பது குறித்து நன்றாகவே தெரியும். வெளிச்சம் குறைவாக இருந்திருந்தால் நிச்சயம் அவர் இறங்கியிருக்க மாட்டார். போதுமான அளவுக்கு அப்போது வெளிச்சம் இருந்ததால்தான் அவர் ஹெலிகாப்டரை இறக்கினார். அவர் மீது எந்தத் தவறும் இல்லை.

நீங்கள் (நிருபர்கள்) தான் இதைப் பெரிதாக்கி அந்த பைலட்டின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். என் பைலட் வாழ்க்கையே முடியப் போகிறது என்று அந்த அப்பாவி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார் என்றார்.

ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியபோது அருகில் இருந்த ரீட்டா பகுகுணா இறுகிப் போன முகத்துடன் காணப்பட்டார்.

ஆனால் சித்தாபூர் கலெக்டர் சஞ்சய் குமார் கூறுகையில், சூரியன் மறைந்த பின்னர் குறைந்த வெளிச்சம் இருந்தபோதுதான் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து உ.பி. மாநில கூடுதல் அமைச்சரவைச் செயலாளர் விஜய் சங்கர் பாண்டே கூறுகையில், தொடர்ந்து பாதுகாப்பு விதி மீறலில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துள்ளோம்.

ஏதாவது விபத்து நேரிட்டு விட்டால் எங்களைக் குறை கூறக் கூடாது என்றார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் சஞ்சய்குமார் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்த விவகாரம் தொடர்பாக ஒரு பேக்ஸும் அனுப்பி வைத்துள்ளார். ரீட்டா பகுகுணா பேசியதை மேற்கோள் காட்டி அவர் புகாராக அதை அனுப்பி வைத்துள்ளார்.

ரீட்டாவால் ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதைப் பயன்படுத்திக் கொண்ட ரீட்டாவுக்கு எதிர் முகாமில் உள்ள காங்கிரஸார், அவருக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.

இதுகுறித்து எதிர்ப்புக் கோஷ்டியைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறுகையில், ஏற்கனவே ராஜசேகர ரெட்டி மறைவு இன்னும் யாருடைய மனதிலிருந்தும் மறையவில்லை. இந்த நிலையில் ரீட்டாவின் பேச்சால் தற்போது ராகுல் காந்திக்கு தர்மசங்கடமாகியுள்ளது. மாயாவதி வாயைத் திறந்து அவலைப் போட்டு மெல்லச் சொன்னது போலாகி விட்டது என்று 'குமுறினார்'.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X