சார்லஸுக்கு பதில் விரைவில் வில்லியம் மன்னராகிறார்?
ராணி எலிசபெத்துக்கு அடுத்து மன்னராக முடி சூட்டப்பட வேண்டியவர் சார்லஸ்தான். ஆனால் அவர் தனது எதிர்ப்பையும் மீறி காதலி கமீலாவை மணந்து கொண்டது எலிசபெத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால், சார்லஸுக்கு மன்னர் பதவியைத் தர அவர் விரும்பவில்லை. மாறாக, சார்லஸ் -டயானா தம்பதியினரின் மூத்த மகனான வில்லியமை மன்னராக்கவே அவர் விரும்புகிறார்.
தற்போது இது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. 27 வயதாகும் வில்லியம், தற்போது ராணி எலிசபெத்தின் பல்வேறு கடமைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அவர் நிழல் மன்னராக செயல்படுவதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.
ராணியின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் எலிசபெத் மற்றும் அவரது 88 வயது கணவரான இளவசர் பிலிப்பின் வேலைகளை வில்லியம் பார்க்க ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டபோதிலும், மன்னருக்குரிய அனுபவத்தைத் தரும் வகையிலேயே தனது பணிகளை பேரன் வில்லியமுக்கு எலிசபெத் ஒதுக்கித் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அடுத்த ஆண்டில் வில்லியம் ராணியின் மேலும் பல பணிகளை தன் வசம் எடுத்துக் கொள்ளப் போவதாக இங்கிலாந்து அரச மாளிகை ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆவணத்தை இங்கிலாந்தின் மெயில் பத்திரிக்கை லீக் செய்துள்ளது.
83 வயதாகும் பாட்டி எலிசபெத் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து செல்லும்போது அவருடன் வில்லியமும் செல்லவுள்ளார். மேலும், தென் ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின்போதும் எலிசபெத்துடன் வில்லியம் உடன் செல்கிறாராம்.
தற்போது வருடத்திற்கு 4000 நிகழ்ச்சிகளில் எலிசபெத் கலந்து கொள்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்தார். ஆனால் மிகவும் பிசியாக இருந்ததால் அதை ரத்து செய்து விட்டார்.
அடுத்த ஆண்டு வில்லியமுக்கு மன்னராக ராணி எலிசபெத் முடி சூட்டக் கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் மெயில் செய்தியை பக்கிங்காம் அரண்மனை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இளவரசர் வில்லியமும், அவரது தம்பி இளவரசர் ஹாரியும், தங்களது ராணுவ சேவையில்தான் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.