வேதாரண்யம் விபத்து-அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்
சென்னை: வேதாரண்யம் பள்ளி வேன் விபத்துக்குள்ளான வழக்கில் சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அறிக்கையை வழங்குமாறு போக்குவரத்துத் துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேதாரண்யம் அருகே பள்ளி வேன் விபத்துக்கு உள்ளாக காரணமாக இருந்தவர்களை தண்டிக்க வேண்டும் எனக் கூறி சென்னையைச் சேர்ந்த டிராஃபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், 'கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் அருகே பள்ளி வேன் ஒன்று குளத்தில் கவிழ்ந்து 9 குழந்தைகள், ஒரு ஆசிரியை பலியானார்கள்.
இந்த வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை. மேலும் செல்போன் பேசியபடியே அஜாக்கிரதையாக வேனை ஓட்டிச் சென்றுள்ளார். இதன் காரணமாகவே விபத்தும் ஏற்பட்டு பிஞ்சுக் குழந்தைகள் உயிர் நீத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அரசு தனி விசாரணை நடத்த வேண்டும். உரிமம் இல்லாமல் வேன் ஓட்டுவதற்கு அனுமதி அளித்தவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை தண்டிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு மோட்டார், வாகன சட்டத்தை மீறி ஆட்டோக்கள், வேன்கள் மற்றும் அரசு பஸ்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றுகிறார்கள். இதுவும் பல சமயங்களில் விபத்துகளுக்கு காரணமாகிறது.
ஆகவே இதை முறைப்படுத்திக் கண்காணிக்காத போக்குவரத்து துறை, அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், 'இந்த வழக்கில் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு (டிராபிக் ராமசாமிக்கு) அறிக்கை தரவேண்டும்' என தமிழக அரசின் போக்குவரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.