For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம்மொழி: கருணாநிதி சொல்வது பொய்-இல.கணேசன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் செம்மொழி அறிவிப்பு தள்ளி போனதற்கு பா.ஜ.க முன்னணித் தலைவர்கள் தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று அக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடந்தது.

அதில் பேசிய இல.கணேசன், தமிழகத்தில் சில கட்சிகள் தமிழ்மொழியை தாங்கள் மட்டுமே கட்டி பாதுகாத்து வருவது போன்ற மாயையை உருவாக்குகின்றன. ஆனால், பாஜக பாரதிய ஜனசங்கமாக இருந்த போதே, தமிழ் மொழியை வழக்கு மொழியாக மாற்ற குரல் கொடுத்தது.

பாஜக முன்னணித் தலைவர்கள், திராவிட குடும்பத்தின் மீது கொண்டிருந்த தீராத வெறுப்பின் காரணமாக, தமிழ் செம்மொழியாக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது என்று, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

தமிழை செம்மொழியாக அறிவிக்க, பாஜக ஆட்சியில் வாஜ்பாயை மூன்று முறை சந்தித்து மனு கொடுத்தோம். அவர், செம்மொழி பட்டியல் எந்த துறையில் வருகிறது என்று கேட்டார்.

இது குறித்து, அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அப்படி ஒரு பட்டியலே இல்லை என்று கூறிவிட்டனர்.

பின்னர் தான் காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையில், தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு தான், செம்மொழி பட்டியல் உருவாக்கப்பட்டு, அதில் தமிழ்மொழி சேர்க்கப்பட்டது.

இது தான் நடந்தது. செம்மொழி பட்டியல் தொடர்பாக, மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த 40 ஆண்டுகளாக, மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட கட்சிகளால், தமிழை வழக்கு மொழியாக கொண்டுவர முடியவில்லை. தற்போதுள்ள இளைஞர்கள், தமிழை படிக்க விரும்புவதில்லை. இவர்களே தொடர்ந்து ஆட்சி செய்தால், தமிழில் பேசக் கூட, தமிழகத்தில் இளைஞர்கள் இருக்கமாட்டார்கள்' என்றார் கணேசன்.

பாஜக உதவியை நாடும் நிலை வரும்:

கூட்டத்தில் பாஜக மாநில புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பாஜகவை தமிழ்நாட்டில் முதல்நிலை கட்சியாக வளர்க்கக் கூடிய வகையில் பாடுபடுவோம்.

தமிழினம் தலை நிமிர்ந்து நிற்க கூடிய வகையில் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் உரிமையை காக்கவும், விவசாயம், மாணவர்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள் நலன் காக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.

பாஜகவை தூற்றியவர்கள், மீண்டும் பாஜகவின் உதவி தேவை என்று நாடக்கூடிய நிலை வரும்.

தமிழக மக்களின் நம்பிக்கைக்கு தக்கபடி உண்மையான, தேசியம் தெய்வீகம் மலர பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தாணுலிங்க நாடார் ஆகியோரின் அடியொற்றி எங்கள் பயணம் அமையும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X