செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் மீட்பு
சென்னை: சொத்து பிரச்னையால் மனமுடைந்து, செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி 3 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சென்னை, வேளச்சேரி விஜயநகரம் பஸ் நிலையம் அருகே தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் உள்ளது. இது சுமார் 65 அடி உயரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இன்று காலை 10 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென டவரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்.
சாலையில் சென்றவர்கள் இதை பார்த்து திடுக்கிட்டு அவரை கீழே இறங்குமாறு கூறினார்கள். அவர் மறுத்துவிட்டதால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிண்டி போலீசார் வந்து வற்புறுத்தியும் அவர் கீழே இறங்கவில்லை. இதனால் ராஜ்பவனில் இருந்து தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
'போலீசார் டவர் மீது ஏறி என்னை பிடிக்க முயற்சித்தால் நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' என்று அந்த வாலிபர் மிரட்டினார்.
போலீசார் அவரைப் பற்றி உடனடியாக விசாரித்து, அவரின் குடும்பத்தினரை வரவழைத்தனர். அவர் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த விக்டர் என்றும், சொத்து பிரச்னை காரணமாக மன உளைச்சல் அடைந்திருந்ததாகவும் தெரியவந்தது.
விக்டரின் குடும்பத்தினரும், போலீசாரும் சேர்ந்து விக்டரை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர முயற்சிக்கு பின்னர் அந்த வாலிபர் பத்திரமாக கீழே இறங்கினார். விசாரணைக்காக அவரை போலீசார் அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications