மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியின் லேப்டாப் சிக்கியது!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவரான கோட்டீஸ்வர ராவ் எனப்படும் கிஷன்ஜியின் லேப்டாப் ஒன்று சிக்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு ஹெட்போன்களும் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் இவை சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல காலமாக தலைமறைவாக இருந்தபடி மாவோயிஸ்டுகளை வழி நடத்தி வருகிறார் கிஷன்ஜி. இவர் ஆந்திராவைச் சேர்ந்த நக்சல் தலைவர் ஆவார். கடந்த ஆண்டு லால்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலால் மேற்கு வங்க அரசு நிலை குலைந்து போனது.
இந்த நிலையில், கோட்வாலி காவல் நிலையத்திற்குட்பட்ட ஜிதுசால் மற்றும் துமுர்போடா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான காட்டுப் பகுதியில், கிஷன்ஜி பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து துணை ராணுவப படையினரும், போலீஸாரும் இணைந்து அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.
இதில் சிலர் சிக்கினர். ஆனால் கிஷன்ஜி சிக்கவில்லை. மாறாக அவர் பயன்படுத்தி வந்த லேப்டாப்பும், ஹெட்போன்களும் கிடைத்துள்ளன.
இதுகுறித்து மேற்கு மிதினாப்பூர் மாவட்ட எஸ்.பி மனோஜ் வர்மா கூறுகையில், 2 பெண்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை ரெய்டு நடந்தது.
தன்பதி மகதோ என்ற நக்சலைட் கொடுத்த தகவலின் பேரில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. கிஷன்ஜி அங்குதான் பதுங்கியிருப்பதாக மகதோ கூறினார்.
தற்போது கிடைத்துள்ள லேப்டாப்பும், ஹெட்போன்களும் கிஷன்ஜி பயன்படுத்தியவை என்று நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications