நவீன் சாவ்லாவை நீக்க கோபாலசாமி கோரிய பரிந்துரைக் கடிதம் வெளியீடு
டெல்லி: தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி எழுதிய பரிந்துரைக் கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நவீன் சாவ்லா ஒரு கட்சி சார்பாக செயல்படுகிறார் என பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவருக்கு அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி கடந்த ஜனவரி மாதம் 93 பக்க கடிதம் எழுதினார்.
மேலும் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் பரிந்துரைத்திருந்தார் கோபாலசாமி. தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் கடிதம் எழுதியது அதுவே முதல் முறையாகும்.
ஆனால் இந்தக் கோரிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக நிராகரித்து விட்டது. மேலும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பின்னர் சாவ்லாவை நியமித்தது.
இந்த நிலையில் கோபாலசாமியின் கடிதத்தை வெளியிட வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதற்கு தலைமைத் தேர்தல் ஆணையரின் (நவீன் சாவ்லா) ஒப்புதல் பெறுமாறு குடியரசுத் தலைவர் அலுவலகம் தகவல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து குறித்து வெளியிட சட்டத்தில் இடமில்லை என நவீன் சாவ்லா ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அக் கடிதத்தை வெளியிடுமாறு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.ரணவத் என்பவர் விடுத்த கோரிக்கை விடுத்து விண்ணப்பித்தார்.
இதை ஏற்று தற்போது கடிதத்தை சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications