விசா நடைமுறையை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா!

இந்த மாற்றங்கள் அமல் படுத்தப்பட்ட பின்னர், சமையலர் மற்றும் முடி திருத்துவோர் போன்ற பணிகளுக்காக ஆஸ்திரேலியா செல்வது வெளிநாட்டினருக்கு இயலாமல் போக வாய்ப்புள்ளது.
அதேபோல், ஆஸ்திரேலியாவில் இந்த வேலைகளுக்காக படித்து வரும் மாணவர்கள் மீண்டும் தற்காலிக விசா கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். 18 மாதத்தோடு அங்கிருந்து மூட்டைக்கட்டிக் கொண்டு தாயகம் திரும்பவேண்டிய சூழலும் ஏற்படக்கூடும்.
இதையே நோக்கமாகக் கொண்டு, ஸ்கில்ட் ஆக்குபேஷன் லிஸ்ட் (SOL) எனப்படும் தொழில் பட்டியலில் முடிதிருத்தும் தொழில், சமையல் போன்ற பல தொழில்களை அப்புறப்படுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
இதுபோன்ற வேலைக்காக விண்ணப்பிக்கப்படும் மாணவர்கள் மத்தியில் தான் ஏராளமான விசா மற்றும் குடியேற்ற குளறுபடிகள் ஏற்படுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதோடு, இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் சம்பவங்களுக்கும் இந்த பரிவைச் சேர்ந்த மாணவர் விசாவில் வந்தவர்களே காரணம் என பரவலாக கருதப்படுகிறது.
இந்தியாவில் உள்ள வசதி குறைந்த நடுத்தர மக்களில் பலர் இதுபோன்ற பணிகளை காரணம் காட்டி, மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா சென்று சுலபமாக நிரந்தர குடியுரிமை பெற்றுவிடமுடியும் என கருதியிருந்தனர்.
இந்தியர் உட்பட பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஏஜென்சிக்கள் மூலமாக விண்ணப்பித்து காத்துள்ளனர். தற்போது விசா மாற்றம் நடைமுறைக்கு வந்தால், இவற்றில் சுமார் 20 ஆயிரம் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
துபாயை நாடும் இந்தியர்கள்:
இதற்கிடையே, உயர் கல்வி கற்க துபாய் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எளிமையான மாணவர் சேர்க்கை, நல்ல வேலைவாய்ப்பு உள்ளிட்டவை காரணமாக துபாய்க்கு போகும் இந்திய மாணவர்களின் எண்மிக்கை அதிகரித்து வருகிறதாம்.
மேலும் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பிரபல கல்வி நிறுவனங்களின் கிளைகள் துபாயில் பெருமளவில் இருப்பதும் இன்னொரு காரணம் என்கிறார்கள்.
பிலானியில் உள்ள பிட்ஸ், மணிப்பால் உயர் கல்வி நிலையம் ஆகியவற்றில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு. அதேசமயம், துபாயில் உள்ள இவற்றின் கிளை நிறுவனங்களில் சுலபமாக இடம் கிடைத்து விடுகிறது.
இதன் காரணமாகவும் துபாயில் போய் உயர் கல்வி கற்க இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனராம்.
இதுகுறித்து இந்திய துணைத் தூதரக அலுவலக வட்டாரத்தில் கூறுகையில், இந்தியாவைச் சேர்ந்த 19 பிரபல கல்வி நிறுவனங்கள் துபாயிலும் தங்களது நிறுவனங்களை நடத்தி வருகின்றன. தற்போது துபாயிலும் வடக்கு எமிரேட்டிலும் மொத்தம் 4500 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications