ஷாருக் படத்தைத் தடுத்தால் இசட் பிரிவு பாதுகாப்பு ரத்து - சவான்; தேவையில்லை- உத்தவ் பதில்

மாநில அரசு வழங்கும் பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை என்று உத்தவ் தாக்கரே பதில் தெரிவித்துள்ளார்.
மை நேம் இஸ் கான், வரும் 12 ந் தேதி வெளியாகிறது. மும்பையில் 63 தியேட்டர்களில் வெளியாகும் இந்தப் படத்திற்கு நேற்று முன்பதிவு செய்யப்பட்ட தியேட்டர்களில் சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவசேனா கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரண்டு தியேட்டர்கள் மீது சிவசேனாவினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தற்போது பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்று காலை முதல் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் மும்பையில் ஷாருக் படம் வெளியாகும் 63 தியேட்டர்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் வீட்டிற்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அசோக் சவான் எச்சரிக்கை
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு அசோக் சவான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிவசேனா தொண்டர்கள் பொறுப்புடனும், ஒழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டும்.
சிவசேனாவினர் தொடர்ந்து ஷாருக் கான் படத்துக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றால், உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கசாப்புக்கே கொடுக்கட்டும்- உத்தவ்
ஆனால் இந்த எச்சரிக்கையை உத்தவ் தாக்கரே நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இவர் யார் எனக்குப் பாதுகாப்பு தர முடியாது என்று கூறுவது. நானே அந்தப் பாதுகாப்பை நிராகரிக்கிறேன். அவர்கள் கசாப்புக்கே முழுப் பாதுகாப்பையும் கொடுத்து விட்டுப் போகட்டும் என்று கூறியுள்ளார் உத்தவ்.
மூத்த சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் கூறுகையில், உத்தவ் தாக்கரே மட்டுமல்லாமல் சிவசேனாவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை திரும்ப ஒப்படைப்பார்கள் என்றார்.
ஆர்.ஆர்.பாட்டீல் சமாளிப்பு..
இந்த நிலையில், நிலைமை விவகாரமாகி விடாமல் தடுக்கும் பொருட்டு, உத்தவ் தாக்கரேவுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். அதேபோலஷாருக் கானுக்கும், அவரது படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சமீபத்தில் பால் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications