திமுகவில் மானசீகமாக இணைந்துவிட்டேன்-எஸ்.வி.சேகர்
கோவை: திமுகவில் மானசீகமாக இணைந்துவிட்டேன் என்று மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூறினார்.
கடந்த 2006ம் ஆண்டு மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.வி.சேகர் (சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர்) பல்வேறு காரணங்களால் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார்.
இதைத் தொடர்ந்து திமுகவுடன் உறவாடி வந்த சேகர், எம்எல்ஏ என்ற முறையில் ஆளும்கட்சி தலைவர்களை சந்திப்பதாக கூறி வந்தார்.
திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை என்றாலும், கடந்த மாதம் நடந்த திமுக பொதுக்குழுவிலும் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார்.
இந் நிலையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவை மாநகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஸ்டாலின் பங்கேற்ற இந்த விழாவிலும் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், 'திமுகவில் நான் மானசீகமாக இணைந்துவிட்டேன். அதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பேன் என்றார்.
விழாவில் ஸ்டாலின் பேசுகையில், திமுக தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு வெற்றிகளையும் பெற்றுள்ளது. தோல்விகளையும் கண்டுள்ளது. வெற்றியில் திமுக இறுமாந்ததுமில்லை. தோல்வியில் துவண்டதுமில்லை. இன்றைக்கு திமுக கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருவதால் ஏராளமானோர் திமுகவில் இணைந்து வருகின்றனர். எப்போதும் மக்களுக்காக பாடுபடுவதுதான் திமுகவின் நோக்கம் என்றார்.
செம்மொழி மாநாட்டு பணி-ஸ்டாலின் ஆய்வு:
இந் நிலையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறித்து ஸ்டாலின் இன்று கோவையில் அரசு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications