சிலி பூகம்பம் எதிரொலி- சில மீட்டர் தொலைவு நகர்ந்து போன தெ. அமெரிக்க நகரங்கள்
கேப்கனவெரல்: சிலியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் அந்த நாட்டின் இரு நகரங்கள் சில மீட்டர் அளவுக்கு நகர்ந்து விட்டன. இதுதவிர தென் அமெரிக்காவின் மேலும் பல நகரங்களும் கூட நகர்ந்துள்ளனவாம்.
மேலும் பூமியில் ஒரு நாளின் அளவும் குறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் பூமியின் சுழல் அச்சில் சுமார் 3 இன்ச் அளவுக்கு மேலும் சாய்வு ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே 2004ம் ஆண்டு சுமத்திராவில் ரிக்டர் அளவில் 9 என பதிவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பூகம்பத்தால் பூமியில் நாளின் அளவு குறைந்ததாக விஞ்ஞானிகள் அப்போது அறிவித்தனர்.
அதே கணக்கீட்டின் படி தற்போது சிலியில் 8.8 ரிக்டர் அளவுடன் பூமி குலங்கியதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பூமியில் ஒரு நாளின் நேரம் வினாடியில் 1.26 மில்லியன் பங்கு என்ற அளவுக்கு குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
அதேபோல் சுமார் 33 அடி சாய்மானத்துடன் சுழன்றுக்கொண்டிருக்கும் பூமியின் சுழல் அச்சிலும் சுமார் 3 இன்ச் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை பூமியில் பதிவான பூகம்பங்களில் ஐந்தாவது கடுமையான பூகம்பமாக சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கருதப்படுகிறது.
மேலும் சிலியில் ஏற்பட்ட பூகம்பம், இதுவரை இல்லாத வகையில் பூகோள பாதிப்புகளை வெவ்வேறு நிலைகளில் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பூமியின் சுழல் அச்சு மற்றும் நாளின் அளவு ஆகியவற்றுடன், சிலியில் உள்ள ஒட்டுமொத்த நகரங்களையும் இந்த பூகம்பம் நகர்த்திவிட்டது.
சிலி பூகம்பத்துக்கு பின்னும், முன்னும் எடுக்கப்பட்ட ஜிபிஎஸ் பதிவுகள் மூலம் இந்த மாற்றம் தெளிவாக தெரியவருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சிலி தலைநகர் சான்டியாகோ மேற்கு நோக்கி சுமார் 28 செமீ வரை நகர்ந்துள்ளது. அதேபோல 2வது பெரிய நகரமான கான்செப்சியான் நகர் சுமார் 3 மீட்டர் வரை நகர்ந்துள்ளதாம்.
இவை தவிர தென் அமெரிக்காவில் உள்ள மேலும் சில நகரங்களும் இதுபோல நகர்ந்துள்ளனவாம்.
அர்ஜென்டினாவில் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரம் மேற்கில் 2.5 செ.மீ அளவுக்கு நகர்ந்துள்ளது.
அதேபோல மென்டோசா, வல்பரைசோ ஆகிய நகரங்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு நகரந்துள்ளன. இவை பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிலியின் கன்செப்சியான் நகருக்கு வட கிழக்கில் உள்ளன.












Click it and Unblock the Notifications