கோர்ட் நடவடிக்கையில் தலையிட வேண்டாம்- தினகரனுக்கு நீதிபதி அறிவுரை
பெங்களூர்: நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன், நீதிமன்ற நிர்வாக பொறுப்பில் தலையிடக்கூடாது என நீதிபதி சைலேந்திர குமார் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த தினகரன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ளார். இவர், தமிழகத்தில் பணியாற்றிய போது திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத்தில் 600 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
இதில் 200 ஏக்கர் நிலம் புறம்போக்கு என்றும், முறைகேடாக நிலத்தை நீதிபதி வளைத்துப் போட்டுள்ளார் என்றும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவரும், மத்திய அரசு உத்தரவின் படி மத்திய நில அளவைத் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து அறிக்கையை அளித்துள்ளனர்.
இதற்கிடையே, இவ்விவகாரத்தால் கடந்த டிசம்பர் மாதம் முதல் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு தினகரன் வராமலேயே இருந்தார்.
இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான சைலேந்திர குமார், நீதிபதி தினகரனுக்கு கடந்த 8ம் தேதி இ-மெயில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், 'உங்கள் மீது நில ஆக்கிரமிப்பு புகார் உள்ளது. இது தொடர்பாக ராஜ்ய சபாவில் கண்டன தீர்மானமும் நிலுவையில் உள்ளது.
எனவே, நீங்கள் தலைமை நீதிபதிக்கான நிர்வாக பொறுப்பை தவிர்ப்பது நல்லது. தலைமை நீதிபதி என்ற முறையில் நிர்வாகத்தை தாங்கள் நடத்தக்கூடாது.
நீதி, ஒழுக்கம் என்ற முறையில் அரசியல் அமைப்பு சட்டப்படி, நீங்கள் தலைமை நீதிபதிக்கான எந் வித பொறுப்பையும் கவனிக்கக் கூடாது.
உங்களது நடவடிக்கைகளால் நீதிமன்றத்தின் வழக்கமான நடைமுறைகள் பாதிப்படைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications