விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மேற்கத்திய வல்லரசு நாடுகள்-இலங்கை கண்டனம்!
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்புகளின் கிளைகளுக்கு உலக வல்லரசு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இலங்கையில் அமைதி திரும்புவதை இவை விரும்பவிலலை என்று கூறியுள்ளார் இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயகே.
புலிகள் இயக்கத்திற்கான எதிராக ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபோது அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார், அவரது உடலை எரித்து சாம்பலை கடலில் போட்டு விட்டோம் என்றெல்லாம் கூறிய இலங்கை அரசு இன்னும் நெருக்கடி நிலையை விலக்கவில்லை.
மாறாக ஆயுதங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது. சீனா இலவசமாகவே ஆயுதங்களை அள்ளி அனுப்பிக் கொண்டிருக்கிறது. தமிழர் பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிப்பை இன்னும் இலங்கை அரசு விலக்கவில்லை. தமிழர்களை சொந்த பூமிக்கு அனுப்பாமல் இன்னும் வதைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கொழும்பு வந்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவிடம், விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் பிரபாகரனைத் தேடி வருவதாக கவலையுடன் கூறியுள்ளார் ரோஹித பொகல்லகாமா.
இந்தச் சூழ்நிலையில், ராணுவ நெருக்கடி நிலையை நீட்டிக்கும் தீர்மானம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிவுகளுக்கு வல்லரசு நாடுகள் ஆதரவு தருவதாக கூறினார் ரத்னசிறி.
அவர் பேசுகையில்,வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளை வலுப்படுத்த சில வல்லரசு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஆசிய நாடுகளில் வலுவான நாடாக இலங்கை வளருவது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நம் நாட்டில் உள்ள சில உள்ளூர் சக்திகளுடன் இணைந்து நமக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பை வலுப்படுத்த முயன்ற சிலர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டில் தங்கி விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்யும் ஒருவரை சமீபத்தில் கொழும்பின் புறநகரான தெஹிவளையில் நம்முடைய போலீஸார் கைது செய்தனர்.
தேச விரோத சக்திகள் கூறும் புகார்களுக்கு ஆதாரங்களாக புனைகதைகளைச் சேர்க்கும் பணியில் சில உள்நாட்டு அமைப்புகளே ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதால் அரசுக்குக் கிடைக்கும் அதிகாரம் எப்போதுமே தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. மக்களுடைய கருத்துரிமைகள் காக்கப்பட்டன, தொழிற்சங்கங்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டன.
ஆனால் சில சக்திகளோ இலங்கை அரசு அடிப்படை உரிமைகளை மீறி அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன.
நாட்டுக்கும் அரசுக்கும் எதிராக சில சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து உளவுப்பிரிவு போலீஸார் மூலம் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய சக்திகளுக்கு எதிராக நாம் செயல்பட்டே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற, பயங்கரவாத சக்திகளை நாம் முறியடித்தோம். வெகு விரைவிலேயே அவர்கள் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகளைப் பெறுவார்கள். அவர்கள் இந்த உரிமைகளைப் பெற முடியாதபடி மற்ற எந்த சக்தியும் தடுத்துவிடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளாகவே வளர்ச்சிப் பணிகள் இன்றி நாடு பின்தங்கிவிட்டதால் இப்போது மிக வேகமாக முன்னேறியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஆசியாவிலேயே வலுவான நாடாக நாம் உருவாவதை சகித்துக்கொள்ள முடியாத நாடுகளும் பிரிவுகளும் இருக்கின்றன.
அப்பாவியான நம்முடைய மக்களின் உணர்வுகளை மாற்றி, தங்களுக்குச் சாதகமாகச் செயல்படவைக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்றார்.
பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் பதிவாகின.












Click it and Unblock the Notifications