சிஐஎஸ்எப் வசம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிட பாதுகாப்பு
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தின் பாதுகாப்புப் பொறுப்பை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை முதல் இது அமலுக்கு வந்துள்ளது. முதல் கட்டமாக 25 ஆயுதம் தாங்கிய சிஎஸ்ஐஎப் படையினர் பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். விரைவில் அதி விரைவுப் படை ஒன்று இங்கு நிறுத்தப்படவுள்ளது.
இந்த இடத்திற்கு வரும் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மீது விடுதலைப் புலிகள் இயக்க அனுதாபிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்குத் தெரிவித்ததாம். இதையடுத்தே இங்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரை நிறுத்தியுள்ளனராம்.
அதேசமயம், ராஜீவ் நினைவிடத்திற்கு வரும் கூட்டம் அதிகரித்து வருவதால்தான் மத்திய படையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
இனிமேல் இங்கு வரும் அனைவரையும் தீவிரமாக பரிசோதிக்கவுள்ளனராம். அவர்கள் கொண்டு வரும் பொருட்களையும் தீவிரமாக சோதிக்கவுள்ளனராம். இதற்காக எக்ஸ்ரே மெஷினையும் நிறுத்தியுள்ளனர்.