என் மகனுக்காக அன்று பாடினார், இன்று நீங்காத நித்திரைக்கு.. S.ஜானகி மறைவால் இதயம் உடைந்த டி.ராஜேந்தர்
சென்னை: பாடகி சுஜாதா ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "அன்று ஜானகி அம்மா போட்ட பாதையில்தான் நாங்கள் எல்லாரும் இன்று போய்க் கொண்டிருக்கிறோம்; எங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தவரே அவர்தான்" நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.. அதேபோல டைரக்டர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கலில், "பாட்டு படித்தாயே... முத்திரை பதித்தாயே... இன்று நீங்காத நித்திரைக்கு சென்று விட்டாயே... என்று என் நெஞ்சம் நீங்காத சோகத்தை கொண்டுவிட்டது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகி எஸ்.ஜானகி அம்மாவின் தனித்துவமான குரல் வளம், துல்லியமான மொழி உச்சரிப்பு, நளினமான உணர்வுகளை தனது குரலிலேயே கடத்தும் வித்தையில் அனைத்தும் நிகர் அவரே தான்.

சோகம், மகிழ்ச்சி, கிராமியம், துள்ளல் இசை என அனைத்து பாணிகளிலும் தனித்து நின்று முத்திரை பதித்த இவர், எஸ்.விஸ்வநாதன் முதல் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியிருக்கிறார்.
சிறந்த குணம் - அசாத்திய திறமை
திரையுலகில் பெரும் செலிபிரிட்டியாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் எளிய குணத்தோடும், புதிய திறமைகளை ஊக்குவிக்கும் பண்போடும் வாழ்ந்து மறைந்துள்ளார் இந்த இசைக்குயில்.. அதனால்தான் தங்களின் சொந்தக் குடும்ப உறுப்பினர் என்றே ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களாலும் கண்ணீருடன் நினைவுகூரப்படுகிறார்
ஜானகியின் மறைவுக்கு பல்வேறு கலைஞர்கள் ஆழ்ந்த இரங்கலையும், கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:
டி.ராஜேந்தர் வீடியோ
"தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி 4 முறை தேசிய விருதுகளையும் எண்ணற்ற மாநில அரசின் விருதுகளையும் வாங்கி குவித்த தென்றல் இசை பாடகி, தேன் குரல் தேவதை எஸ்.ஜானகி மறைந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகிறது.
நெஞ்சம் பாடும் புதிய ராகம், தாளம் உன்னை தேடுதே என்று நினைவில் நின்ற நெஞ்சில் ஒரு ராகம் தந்து விட்டாரே.. நீங்காத சோகம்... வசந்தம் பாடி வர.. வைகை ஓடி வர... இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா என்று என் மெட்டுக்கு மெருகேற்றியவர் பாட்டுக்கு அமுதூட்டியவர்.
சம்சார சங்கீதம் படத்தில் என் மகன் சிலம்பரனுக்காக 'ஐ அம் எ லிட்டில் ஸ்டார்... ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்...' என்று பாட்டு படித்தாயே... முத்திரை பதித்தாயே... இன்று நீங்காத நித்திரைக்கு சென்று விட்டாயே... என்று என் நெஞ்சம் நீங்காத சோகத்தை கொண்டுவிட்டது..
அம்மையாரை இழந்து வாடும் அவரது இல்லத்தினருக்கும். இந்திய கலை உலகத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதலையும் இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன். அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாடகி சுஜாதா கண்ணீர்
அதேபோல பாடகி சுஜாதா ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "அன்று ஜானகி அம்மா போட்ட பாதையில்தான் நாங்கள் எல்லாரும் இன்று போய்க் கொண்டிருக்கிறோம்; எங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தவரே அவர்தான்.
நாங்கள் மைசூருவிற்கும், ஹைதராபாத்திற்கும் நேரில் போய் ஜானகி அம்மாவை பார்த்தோம். 2 மாதங்களுக்கு முன்னாடிதான் ஜானகி அம்மாவைப் பார்த்தேன்.. அப்போ நல்ல ஆரோக்கியமாக இருந்தார்.. நாம் அங்கே போனால் நம்மைச் சாப்பிட வைக்காமல் விடவே மாட்டார். தன் கையாலேயே சாதத்தை உருண்டை உருண்டையாகப் பிடித்து நமக்கு ஊட்டி விடுவார். அவ்வளவு பாசம், அவ்வளவு சிநேகம் அவரிடம் இருந்தது.. அதுதான் ஜானகி அம்மா.
அவர்களுடைய பாட்டு நமக்குத் தெரியும், அது வேறு லெவல், அவர்கள் ஒரு நடமாடும் சரஸ்வதி. ஆனால், ஒரு சிறந்த மனிதராகவும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்.. ஒரு உண்மையான கலைஞர் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று விக்கி விக்கி அழுதவாறே கூறினார்.














Click it and Unblock the Notifications