காலம் கடந்தும் ஒலிக்கும் இசை… இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் மறைவு – பாடகி சுஜாதா மோகன் உருக்கம்
சென்னை: (S. P. Venkatesh Passes Away) மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் 80, 90-களின் பொற்காலத்தை இசையால் மலர செய்த பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் சென்னையில் காலமானார். 70 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்தார். அவரது மறைவு, மலையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகமே ஒரு முக்கியமான இசை ஆளுமையை இழந்த துயரமான தருணமாக பார்க்கப்படுகிறது.

எஸ் பி வெங்கடேஷ்
எஸ்.பி. வெங்கடேஷ் தனது இசைப் பயணத்தை 1960-களின் இறுதியில் தொடங்கினார். தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றி, பின்னர் முழுநேர இசையமைப்பாளராக வளர்ந்தார். பல மூத்த இசையமைப்பாளர்களின் கீழ் பணிபுரிந்த அனுபவம், அவருடைய இசையில் ஒரு தனித்துவமான மெலடிக்கும், கிளாசிக்கல் தொனிக்கும் அடித்தளமாக அமைந்தது.
1981-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் 'பிரேம யுத்தம்' (Prema Yuddha) மூலம் தனித்துவமான இசையமைப்பாளராக அறிமுகமானார். 1980, 1990-களில் மலையாள சினிமாவில் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக எஸ்.பி. வெங்கடேஷ் உயர்ந்தார்.
டென்னிஸ் ஜோசப், தம்பி கண்ணந்தனம், ஜோஷி போன்ற முன்னணி இயக்குநர்களுடன் அவர் அடிக்கடி பணியாற்றினார். 'ராஜாவின்டே மகன்', 'கிலுக்கம்', 'ஜானி வாக்கர்', 'துருவம்', 'வல்சல்யம்', 'கபூலிவாலா', 'மின்னாரம்', 'மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங்', 'ஸ்படிகம்' போன்ற படங்களில் அவர் அமைத்த பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் ஒலித்து வருகின்றன.
பின்னணி இசை
பாடல்களோடு மட்டுமல்லாமல், பின்னணி இசையிலும் (BGM) எஸ்.பி. வெங்கடேஷ் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். 'நம்பர் 20 மத்ராஸ் மெயில்', 'தேவாசுரம்', 'சந்திரலேகா', 'வழுந்னோர்', 'காக்கக்குயில்', 'ரன்வே' போன்ற படங்களில் அவரது பின்னணி இசை, கதாபாத்திரங்களின் உணர்வுகளை தீவிரமாக வெளிப்படுத்தியதுடன், அந்தப் படங்களை காலத்தைக் கடந்த கிளாசிக்குகளாக மாற்றுவதிலும் முக்கிய பங்காற்றியது.
மாநில விருது
1993-ம் ஆண்டு, 'பைத்ருகம்' மற்றும் 'ஜனம்' படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருது எஸ்.பி. வெங்கடேஷ்க்கு வழங்கப்பட்டது. இது அவரது இசை வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது.
பல மொழிகளில் பங்களிப்பு
மலையாள சினிமாவே அவரது பிரதான களம் என்றாலும், எஸ்.பி. வெங்கடேஷ் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் இசையமைத்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் மொழி எல்லைகளை தாண்டி பணியாற்றிய இசையமைப்பாளர்களில் ஒருவராக அவர் நினைவுகூரப்படுகிறார்.
சென்னையில் இறுதி அஞ்சலி
சென்னையில் காலமான எஸ்.பி. வெங்கடேஷின் இறுதிச் சடங்கு, சென்னையின் ஆலப்பாக்கம் பகுதியில் நாளை நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். மலையாள திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வருடம் பல பாடல்களுக்கு பணியாற்றிய பாடகி சுஜாதா மோகன் தன்னுடைய instagram பக்கத்தில் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் "இசை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு இசையமைப்பாளர் எஸ்பி வெங்கடேஷ் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மெல்லிசைகள் அழியாமல் நிலைத்திருக்கும்" என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications