கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பண பரிமாற்றம்-வழக்கு ஒத்திவைப்பு
கோபி: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது 2000ம் ஆண்டில் சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
108 நாட்கள் அவர் பிணைய கைதியாக வைக்கப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்ட போது பெருந்தொகை கைமாறியதாக கூறப்பட்டது.
அந்த பெருந்தொகையை வீரப்பன் தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருக்கலாம் எனக் கூறி சேலம் மாவட்டம் கொளத்தூர் போலீசார், முத்துலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் 26 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோபி விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் 26 பேர் கோபி விரைவு நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.