விமானத்தில் வெடிகுண்டு வைத்தது யார் - திருவனந்தபுரத்தில் பரபரப்பு

பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று காலை 8.25 மணிக்கு கிங்ஃபிஷர் ஐடி 4731 தனியார் விமானம் வந்தது.
விமானத்தில் இருந்த 27 பயணிகளும் இறங்கிய பின்னர், சுத்தப்படுத்துவதற்காக துப்புறவுப் பணியாளர்கள் விமானத்திற்குள் ஏறினார்கள்.
அப்போது விமானத்துக்குள் பொருட்கள் வைக்கும் பகுதியில் சந்தேகத்துக்கிடமான பை ஒன்றை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.
மலையாள செய்தித்தாளில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த பொருட்கள் நாட்டு வெடிகுண்டு போல இருந்ததால், உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவித்தனர்.
உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் நுழைந்தனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்க மின்னல் வேகத்தில் தகவல் பறந்தது.
விமானத்துக்குள் இருந்த சந்தேகத்துக்கிடமான பார்சலை பத்திரமாக அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.
பின்னர் விமானம் தனியான ஒதுக்குபுறத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
விமானத்தில் காகிதத்தில் சுற்றப்பட்டு இருந்த பார்சல் பொருள் நாட்டு வெடிகுண்டு போல, கிரிக்கெட் பந்து அளவில் இருந்ததாக நேரில் பார்த்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்தனர்.
எனினும் இது என்ன வகையான வெடிகுண்டு என்பது உரிய சோதனைகளுக்கு பின்னரே தெரியவரும் என விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் விமானத்துக்குள் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி சந்தேகத்துக்கு இடமான ஒரு பொருள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என்ற கேள்வி அனைவரையும் கிடுகிடுக்க வைக்கிறது.
விமானத்தில் தீவிரவாதிகள் யாரேனும் வெடி பொருளை கொண்டு வந்து வைத்தார்களா? வெடிப் பொருள் வெடிக்காமல் செயலிழந்து விட்டதா? அல்லது அடுத்த பயணத்தின் போது வெடிக்கச் செய்வதற்கான சதி திட்டம் தீட்டப்பட்டிருந்ததா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
ஆனால், 'அங்கிருந்தது பயப்படும் படியான வெடிகுண்டு அல்ல. ஏதோஒரு வெடிபொருள் போன்றது. எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளோம். விசாரணை தொடங்கிவிட்டது.
எல்லா கேள்விகளுக்கு திங்கள் கிழமை (நாளை) விடை கிடைக்கும். விமானத்துக்குள் இருந்தது எந்த விதமான வெடிப்பொருள் என்பது விசாரணையில் தெரியவரும்' என்று திருவனந்தபுரம் காவல்துறை தலைவர் எம்.ஆர்.அஜித்குமார் தெரிவித்தார்.
முன்னதாக, அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரிடமும் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர். விமானம் புறப்பட்ட பெங்களூர் விமான நிலையத்திலும் தீவிர வீசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகமும் கேட்டுள்ளது. இதற்கிடையே நீண்ட சோதனைக்கு பின்னர் கிங்ஃபிஷர் விமானம் பிற்பகல் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications