அற்ப பிரச்னைக்கெல்லாம் அப்பீல் செய்வதா- உச்சநீநிமன்ற நீதிபதிகள் கண்டனம்

உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், உச்சநீதிமன்றத்தில் 70 ஆயிரம் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தேவையின்றி அப்பீல் மனுக்கள் போடுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மத்தாய் என்பவர், சர்ச்சைக்குரிய ஒரு உயிலை இரண்டாவது முறையாக தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுக்களை விசாரணை நீதிமன்றமும், கேரள உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில், 'கீழ் கோர்ட்டுகள் மற்றும் தீர்ப்பாயங்களின் உத்தரவுக்கு எதிரான அப்பீல் மனுக்களை ஏற்பது குறித்து அரசியல் சட்டத்தின் 136வது பிரிவு, உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளித்துள்ளது.
ஆனால், அரசியல் சட்ட பிரச்சினைகள், நீதி சீர்குலைக்கப்படும் விவகாரம், அடிப்படை உரிமை மீறல்கள் போன்ற விதிவிலக்கான வழக்குகளுக்கு மட்டுமே இந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால், ஐகோர்ட்டுகளோ, வேறு கோர்ட்டுகளோ பிறப்பிக்கும், எல்லா சாதாரண வழக்குகளின் தீர்ப்புகளையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
இவர்களுக்கு 136வது பிரிவின் முக்கியத்துவம் தெரியவில்லை.
இதனால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனுக்கள் குவிந்து விடுகின்றன.
இந்த சுமையால், தகுதியான வழக்குகளுக்கு கூட, நீதிபதிகள் அதிக நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. இதனால் எங்கள் தீர்ப்பின் தரம் பாதிக்கப்படும்.
அற்ப பிரச்சினைகளுக்கெல்லாம் அப்பீல் செய்யும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், வழக்கு சுமையால், சுப்ரீம் கோர்ட்டு தள்ளாடி விழுந்து விடும்.
சாதாரண வழக்குகளுக்கு, ஐகோர்ட்டுகள்தான், இறுதிக்கட்ட கோர்ட்டாக இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு என்பது, அரசியல் சட்ட சிக்கல்கள், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் சட்டத்தின் அம்சம், யாருக்காவது கடுமையான அநீதி இழைக்கப்படும் விவகாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை விசாரிப்பதற்காகவே இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு குறைவான நேரமே இருக்கிறது. அதனால், எல்லாவகையான வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
இதைக் கருத்தில்கொண்டு, எந்தெந்த வகையான அப்பீல் மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாம் என்பது பற்றிய அளவுகோல்களை அரசியல் சட்ட பெஞ்சு வகுக்க வேண்டும்' என்று கூறினர்.












Click it and Unblock the Notifications