திருவண்ணாமலையில் நில ஆக்கிரமிப்பு: நித்யானந்தாவின் நண்பர் மீது புகார்
சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலைப்பகுதியை ஆக்கிரமித்துள்ள, நித்யானந்தாவின் நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சி.எம்.சிவபாபு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறம் முலைப்பால் தீர்த்தம் அருகே பால தண்டாயுதபாணி திருக்கோயில் என்ற பெயரில் லாட்ஜ் ஒன்றை, வேதவித்து என்கிற கிருஷ்ணன் என்கிற கனகராஜ் கட்டியுள்ளார்.
இதற்காக அந்த மலையில் 50 சென்ட் இடத்தை அவர் ஆக்கிரமித்துள்ளார். ஜெலட்டின் போன்ற வெடிபொருட்களை பயன்படுத்தி அந்தப் பகுதியில் அவர் லாட்ஜ் எழுப்பியுள்ளார்.
புனித ஸ்தலங்களை காப்பது, ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. கனகராஜ் தன்னை சமீபத்தில் நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாசப் படத்தில் சிக்கிய நித்யானந்தா பரமஹம்சாவின் நெருங்கிய நண்பர் என்று விளம்பரம் செய்துள்ளார்.
ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வன அதிகாரி உள்ளிட்டோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் புகார் அனுப்பினேன்.
அதை தொடர்ந்து அந்தக் குடிலைப் பார்வையிட்டார்கள், ஆனால் கனகராஜ் மீது இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அவரிடம் இருந்து அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு விட்டுவிட்டனர். எனவே, அதைக் கண்டித்து போராட்டம் நடத்தினேன். உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்கும்படி, உள்துறை செயலாளர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வன அதிகாரி, இந்து அறநிலையத் துறை இணை கமிஷனர், கனகராஜ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications