பள்ளி விழாவில் மின் விபத்து - ஒருவர் பலி - மாணவர்கள் காயம்!
ராமநாதபுரம்: பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது மின் விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார். மாணவர்கள் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடியில் உள்ள ஒரு தனியார் நர்சரி பள்ளியின் ஆண்டுவிழா நேற்று மாலை நடந்தது.
மாலை 5 மணி அளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது. நிகழ்ச்சியை காண மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.
அப்போது விழா மேடைக்கு முன்பு அமைக்கப்பட்டு இருந்த 'மைக் செட்' அருகில் ஒருவரை திடீரென மின்சாரம் தாக்கியது. உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
பின்னர் மீண்டும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அடுத்த சில நிமிடங்களில் மைக் செட்டில் மின்கசிவு ஏற்பட்டு அலங்கார விளக்குகள் வெடித்தன.
மின் வயர்கள் இரும்பு நாற்காலிகளில் விழுந்ததால், அவற்றில் அமர்ந்து இருந்த மாணவ- மாணவிகள் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் சிலர் மயங்கி விழுந்தனர்.
மின்சாரம் தாக்கியதில் கருங்குடி கிராமத்தை சேர்ந்த வீரய்யா (35) மாணவ- மாணவிகள் 30 பேர் காயம் அடைந்தனர். இதனால் விழாவில் பதட்டம் நிலவியது. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு வாகனங்களில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வீரய்யா இறந்தார். மாணவ- மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். திருப்பாலைக்குடி பகுதியில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மின்தடை நேரமாகும். எனவே மைக் செட் ஏற்பாடு செய்தவர் மின்சாரத்துக்காக உயர் அழுத்த மின் கம்பியில் கொக்கி போட்டு இருந்தார்.
விழா தொடங்கியதும் ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மின்சாரம் வந்ததும் அதிக மின் சப்ளை காரணமாக தீப்பொறி பறந்து உள்ளது.
அப்போது ஜெனரேட்டரும் ஓடிக்கொண்டே இருந்ததால் தீ விபத்து ஏற்பட காரணமாகிவிட்டது. அதோடு கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்பட்டதாலும் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பள்ளி மேலாளர் சாகுல் அமீது மற்றும் மைக் செட் அமைப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி தாளாளர் மரைக்காயர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications