கள்ளநோட்டு அச்சடித்த போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது
நெல்லை: கள்ளநோட்டு அச்சடித்த போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியில் ஒரு கும்பல் 100 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
தனிப்படை போலீசார் பணகுடி பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பணகுடியை சேர்ந்த சேகரராஜ் மகன் ராபர்ட் (வயது 40), காவல்கிணற்றில் உள்ள ஒரு பேக்கரியில் 100 ரூபாய் கொடுத்து பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தார்.
அவர் மீது சந்தேகம் கொண்ட தனிப்படை போலீசார், அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கையில் வைத்து இருந்த 100 ரூபாய் நோட்டை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அது கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து நான்கு 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை போலீசார் கைப்பற்றினர்.
இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காட்டை அடுத்த காட்டுவிளையை சேர்ந்த ராமசாமி மகன் சேகர் (40) என்பவரிடம் இருந்து ராபர்ட் கள்ளநோட்டுகளை வாங்கியது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த கள்ள நோட்டு புழக்கத்தில், ராபர்ட் உடன் துரை மகன் அய்யப்பன்(30) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சேகர், தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் சேகர், அய்யப்பன் ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சேகர் வீட்டில் சோதனை செய்த போது, கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர், மை, காகிதங்கள் மற்றும் பேப்பர் கட்டர் போன்ற நவீன கருவிகள் இருந்தன.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் இருந்து ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications