ஜெயலலிதாவுக்கு கண்ணியத்தோடு பதிலளித்தால்... துரைமுருகன்
சென்னை: ஜெயலலிதாவின் பாணியில் நாங்களும் திரும்ப எழுத ஆரம்பித்தால் அவரால் தாங்கி கொள்ள முடியுமா? என்று சட்ட அமைச்சர் துறைமுருகன் கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையையும் ஒரு பொருட்டாக மதித்து, அந்த அறிக்கையினை பெரிதாக எடுத்துக்கொண்டு, நாகரீகத்தோடும், கண்ணியத்தோடும் முதல்வர் கருணாநிதி பல்வேறு புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துக்காட்டி விளக்கமளித்திருந்தார். ஜெயலலிதாவிற்கு கண்ணியத்தோடு பதிலளித்தால் அவரால் ஏற்றுக்கொள்ள முடியுமா?.
அவரது முதல் அறிக்கையிலே கடந்த ஆண்டு 1,024 கோடி ரூபாயாக இருந்த பற்றாக்குறை இந்த ஆண்டு 3,396 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதை குறையாக சொல்லியிருந்தார்.
அதற்கு முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா கூறிய 1,024 கோடி ரூபாய் பற்றாக்குறை- திட்ட மதிப்பீடு, அது திருத்த மதிப்பீட்டில் 5,020 கோடியாக உயர்ந்ததை ஜெயலலிதா குறிப்பிடவில்லை, அவ்வாறு உயர்ந்த 5,020 கோடி ரூபாய் பற்றாக்குறை தான் இந்த ஆண்டு திட்ட மதிப்பீட்டில் 3,396 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என்று எடுத்துக் காட்டியிருந்தார்.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் இது நகைப்புக்குரியது என்று அறிக்கை விடுகிறார் என்றால் அவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்று தானே அர்த்தம். கருத்துக்கு பதில் சொல்ல முடியாமல், அறியாமை, நகைப்பு என்றெல்லாம் வார்த்தையிலே வெறுப்பை ஜெயலலிதா கொட்டியிருக்கிறார்.
பற்றாக்குறை திட்ட மதிப்பீட்டினை விட திருத்திய மதிப்பீட்டில் பற்றாக்குறை அதிகமாகும் என்பது பொருளாதாரம் புரிந்தவர்களுக்கெல்லாம் தெரியும். ஆனால் அதையும் ஜெயலலிதா திருத்திய மதிப்பீட்டில் உயர்ந்துவிட்டதே என்கிறார்.
அவர் எப்படி முதல்வராக இருந்தார்?. அவரது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு முறையும் திட்ட மதிப்பீட்டினை விட திருத்திய மதிப்பீட்டில் தொகையை குறைத்துத்தான் நிதி நிலை அறிக்கை தயாரித்தாரா?.
மேலும் ஜெயலலிதா தனது ஒவ்வொரு அறிக்கையிலும் கலைஞருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு விழா நடத்துவதையும், நன்றியறிவிப்பு கூட்டங்கள் நடத்துவதையும் வயிற்றெரிச்சல் காரணமாக பொறுத்து கொள்ள முடியாமல் அவஸ்தைபடுகிறார். அந்த அவஸ்தை தான் அவரது ஒவ்வொரு அறிக்கையிலும் வெளிவருகிறது. பாராட்டு விழா-பாராட்டு விழா என்று கரித்துக் கொட்டுகிறார்.
அதற்காக அவர்கள் அழைத்து பாராட்டுகிறார்கள். அதற்காக ஜெயலலிதா வயிற்றெரிச்சல்பட்டு அறிக்கையிலே அதனைக் காட்டினால் என்ன பொருள்?.
முதல்வரா ஒவ்வொருவரையும் அழைத்து பாராட்டு விழா நடத்துங்கள் என்று கேட்கிறார். ஏழை-எளிய மக்களின் நிலத்தை அபகரித்து சிறுதாவூரில் பங்களா கட்டிக்கொள்ள நினைப்பவர்களுக்கு- திரைப்படத் துறையிலே உள்ள தொழிலாளர்களுக்கு நிலம் ஒதுக்க எப்படி மனம் வரும்?.
திரைப்பட துறையினருக்கு வீடு கட்டிக்கொள்ள நிலம் ஒதுக்க முன்வந்த முதல்வருக்கு அவர்கள் பாராட்டு விழா நடத்தினால் ஜெயலலிதா ஏன் வருத்தப்பட வேண்டும்?
அரசியல் நாகரீகத்தோடு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நிதிநிலை அறிக்கை குறித்து எழுப்பியுள்ள ஐயங்களுக்கு விடையளிக்க வேண்டுமென்று தானே கண்ணியத்தோடு முதல்வர் பதில் அளித்திருந்தார். அதற்கு முறையாக பதில் அளிக்கத் தெரியாமல் அநாகரிக வார்த்தைகளினால் அர்ச்சனை செய்தால்- அதே பாணியில் பதிலளிக்க என்னை போன்றவர்கள் தானே முன் வர வேண்டும்?.
ஜெயலலிதா தனது அறிக்கையில் தேர்தல் ஆண்டு என்பதை மனதிலே கொண்டு தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்றும் சொல்லிவிட்டு, பிறகு நிதிநிலை அறிக்கையிலே எதுவுமே இல்லை என்றும் எழுதியதை சுட்டிக்காட்டிய கலைஞர், தேர்தலை மனதிலே கொண்டு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்றால், அதிலே ஏராளமான அறிவிப்புகள் இருப்பதாக ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டதாக தானே அர்த்தம்?. ஆனால் எந்தத் திட்டங்களும் இல்லை என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது தானே என்று எழுதியிருந்தார்.
இதிலே என்ன தவறு உள்ளது? இதை சுட்டிக்காட்டி எதற்கும் உதவாத கேள்வி-பதில் என்று ஜெயலலிதா அறிக்கை எழுதினால், அதே பாணியில் நாங்களும் திரும்ப எழுத ஆரம்பித்தால் ஜெயலலிதாவினால் தாங்கி கொள்ள முடியுமா?.
அரசியல் நாகரிகத்தோடு, கண்ணியத்தோடு நடத்த வேண்டுமென்று எங்கள் தலைவர்கள் சொல்லிக் கொடுத்த முறைப்படி நாங்கள் நடக்கிறோம்.
இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications