போலீஸ் ரெய்டு எதிரொலி: வேலூர், நெல்லையில் போலி மருந்துகள் எரிப்பு!

இதன் எதிரொலியாக வேலூர் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் பல லட்சம் மதிப்புள்ள காலாவதி மருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இவற்றை எரித்தவர்கள் யார் என கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாத்திரை மற்றும் மருந்துகளின் காலாவதி தேதியை அழித்துவிட்டு போலியாக புதிய தேதி அச்சிட்டு ஆபத்தான வகையில் மோசடி விற்பனை சென்னையில் நடந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
காலாவதியான மருந்து மாத்திரைகளை கொடுங்கையூர் குப்பையில் இருந்து சேகரித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கோயம்பேட்டில் இதெற்கென தனி தொழிற்சாலை நடத்தி வந்த மீனா ஹெல்த்கேர் என்ற மருந்து நிறுவனத்தையும் போலீசார் சுற்றிவளைத்து சீல் வைத்தனர்.
ஆனால், மருந்து நிறுவனத்தின் உரிமையாளர்களான மீனாட்சி சுந்தரம், பிரதீப் சோர்டியா உட்பட நிர்வாகிகள் தப்பியோடி விட்டனர்.
காலாவதி மருந்துகளை வண்டியில் ஏற்றிவந்த டிரைவர் வெங்கடேசன் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவி என்ற இருவர் மட்டும் போலீசிடம் நேற்று சரணடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில், மருந்து நிறுவன அதிபர்களில் ஒருவரான பிரதீப் சோர்டியாவை போலீசார் கைது செய்தனர்.
காலாவதியான மருந்து விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த இவரை போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் இம்மோசடி விவகாரம் வெடித்த உடனடியாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற கும்பல் இருந்தால் கண்டுபிடிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மருந்து நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பல இடங்களில் பீதியடைந்த மருந்து கடைக்காரர்கள் மற்றும் ஸ்டாக்கிஸ்டுகள் தங்களிடம் உள்ள காலாவதி மருந்துகள் அனைத்தையும் குப்பையில் கொட்டியும், தீவைத்து எரித்தும் வருகின்றனர்.
வேலூரில் பல லட்சம் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் நகரின் பல்வேறு இடங்களில் மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் போலி மருந்துகள் என தெரியவந்துள்ளது. வேலூர் எல்.ஐ.சி. காலணி, வேலூர் பைபாஸ் சாலை, பாலாற்றங்கரை என மூன்று இடத்தில் போலி மருந்துகளை கொட்டி எரிந்துள்ளனர்.
இன்று காலை அவை பாதி எரிந்தும், எரியாமலும் கிடந்தை போலீசார் கண்டுபிடித்தனர். போலி மருந்துகளை எரித்தது யார் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலி மருந்துகள் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், எரித்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதேபோல் நெல்லையிலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் ரோடடில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை ஜங்ஷன் பெருமாள் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி பகுதிகளில் மருந்து மொத்த விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன. மாநிலம் முழுவதும் சோதனை நடத்தப்படுவதை அறிந்த விற்பனையாளர்கள் காலாவதியான மருந்துகளை தெருவில் கொட்டியுள்ளனர்.
பெட்டி, பெட்டியாக மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகள், டானிக்குகள் கொட்டப்பட்டுள்ளன. பெரும்பாலானவை 2009ம் ஆண்டு காலாவதியானவை ஆகும்.
இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. ரோட்டில் கொட்டப்பட்டுள்ள மருந்துகளை மாநகராட்சி துப்பரவு பணியாளர் லாரியில் எடுத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications