மகாவீரர் பிறந்த நாள் - முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து

இதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
வர்த்தமான மகாவீரர் பிறந்த திருநாள் இந்த ஆண்டில் மார்ச் 28ஆம் நாளன்று நாடு முழுவதும் ஜைன சமய மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவுக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் பிறந்தவர் வர்த்தமானர். இவர் அரச வாழ்வையும், பிற செல்வங்களையும் இளமையிலேயே துறந்ததுடன், விருப்பு, வெறுப்புகளையும் வென்றவர் என்பதால், வரலாற்றில் மகாவீரர் என அழைக்கப்படுகிறார்.
ஜைன சமய கோட் பாடுகளில் சீர்திருத்தங்கள் செய்த மகாவீரர்,நல்ல நம்பிக்கை, நல்ல அறிவாற்றல், நல்ல பண்புகள், ஒவ்வொருவருக்கும் தேவை எனப் போதித்தார். எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்தலாகாது, உண்மைகளை மட்டுமே பேச வேண்டும், முறையற்ற வழியில் எந்த பொருளையும் ஏற்கலாகாது, அறநெறி நீங்கி இன்பம் நுகர்தல் ஆகாது, பொருளாசையை முற்றிலும் நீக்குதல் வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அரசபோகத்தையும், செல்வத்தையும் துறந்து, தாம் போதித்த கொள்கைகளுக்கு சான்றாக வாழ்ந்து காட்டிய மகாவீரர் பிறந்த திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி தமிழகத்தில் வாழும் ஜைன சமய மக்கள் தங்கள் குடும்பத்தார், குழந்தைகள், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திட உதவியது தி.மு.க. அரசு.
முந்தைய அ.தி.மு.க. அரசு காலத்தில் மறுக்கப்பட்ட அந்த விடுமுறையை 2006 க்குப் பின் மீண்டும் நடைமுறைப்படுத்தி, தமிழகத்தில் வாழும் ஜைன சமய மக்களிடம் கொண்டுள்ள அன்பினை புலப்படுத்திய அந்த அரசின் சார்பில் அவர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மகாவீரர் பிறந்த தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்.
பிற உயிர்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைத்தல் கூடாது என எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டிய அறவாணர் மகாவீரர் பிறந்த இந்நன்னாளில் எல்லா மனிதரிடத்தும் அன்பு செலுத்தி, மனித நேயம் தழைக்கப் பாடுபடுவோம் என உறுதியேற்போமாக என்று தெரிவித்துள்ளார்.
அகிம்சை நெறி, அற நெறி தழைக்கட்டும்: ஜெ.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
சமணமதத்தின் 24 வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரர் அவதரித்த நாளை மகிழ்வுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்பிக்கை, நல்லுறவு, நன்னடத்தை ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம் என்ற தத்துவத்தை போதித்தவர் மகாவீரர்! தீங்கிழையாமை, உண்மை, திருடாமை, பற்றின்மை போன்ற மகாவீரரின் போதனைகள் மனித நேயத்தையும், அன்பையும், அகிம்சையும் பறைசாற்றுகின்றன.
வன்முறை என்னும் கோரப்பிடியில் இருந்து விடு பட, மகாவீரரின் அகிம்சை நெறி, அறநெறி தமிழகம் எங்கும் தழைத்திட உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, இந்த நன்னாளில் அவரது தத்துவங்களை கடைபிடிக்கும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications