பென்னாகரம் எல்லையில் பாமக- திமுக மோதல்
பென்னாகரம்: இன்று இடைத் தேர்தல் நடக்கும் பென்னாகரம் தொகுதி எல்லையில் மேச்சேரி என்ற கிராமத்தில் குவிந்துள்ள திமுக மற்றும் பாமக தொண்டர்களிடையே மோதல் வெடித்தது.
பென்னாகரம் தொகுதிக்குள் வெளியூர்வாசிகள் இருக்கக் கூடாது என்ற தடையால் அவர்கள் மேச்சேரி கிராமத்தில் குவிந்துள்ளனர். இன்று காலை அங்கு குழுமியிருந்த திமுக, பாமகவினரிடையே மோதல் வெடித்தது.
திமுகவினரின் 2 கார்களை பாமகவினர் தாக்கி அடித்து நொறுக்கினர். இதையடுத்து திமுகவினர் பதில் தாக்குதலில் இறங்கினர். மேச்சேரி பாமக அலுவலகத்தை தாக்கி சூறையாடினர். அங்கிருந்த பொருட்கள் ரோட்டில் வீசப்பட்டன. விரைந்து வந்த போலீஸார் இரு தரப்பினரையும் கலைத்தனர்.
பாமக அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியினர் சேலம்- மேட்டூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பாமகவினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த மோதலால் பெரும் பதற்றம் நிலவுவதால் அப் பகுதியி்ல் கடைகள் அடைக்கப்பட்டன.
மேட்டூர் பரிசல் துறைகளில் சோதனை:
இந்த நிலையில் பென்னாகரம் தொகுதியின் எல்லையில் உள்ள மேட்டூர் அணையின் பரிசல் துறைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அணையின் கரை பென்னாகரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பரிசல் துறைகள் வழியாக பென்னாகரத்துக்கு வாக்காளர்கள் வந்தனர். இதையடுத்து அவர்களிடம் முறையாக வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி பென்னாகரத்திற்குள் நுழைய அனுமதித்தனர்.
பண்ணவாடி, செட்டிப்பட்டி, கோட்டையூர் பரிசல்துறைகளில் இருந்து அவர்கள் பென்னாகரத்துக்கு சென்றனர். பாதுகாப்புக்காக இந்த 3 பரிசல் துறைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூரிலிருந்து குவிந்த வாக்காளர்கள்...
இதேபோல, பென்னாகரம் தொகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். தேர்தலையொட்டி இன்று இவர்கள் பென்னாகரத்திற்கு வந்தனர்.
கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் இன்று வாக்களிக்க இந்த ஊர்களிலிருந்து பென்னாகரத்திற்கு வந்திருந்தனர்.
'மக்கள் குரல்' நிருபர் மீது திமுகவினர் தாக்குதல்:
இதற்கிடையே, பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் 'மக்கள் குரல்' நிருபர் பாண்டியன் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், 'கௌரிசெட்டிப்பட்டி என்ற இடத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக செய்திகள் வந்தன. இதையடுத்து செய்திகள் சேகரிக்கச் சென்றேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைப் பார்த்த நான் படம் பிடித்தேன்.
அப்போது என்னை துரத்திய திமுவைச் சேர்ந்த ஜிகே போர்வெல் நிறுவன ஆட்கள், என்னை அடித்ததுடன், என்னிடம் இருந்த கேமராவையும் சேதப்படுத்திவிட்டனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
வாக்காளர்களுக்குப் பணம்-அறிக்கை அனுப்பியது அரசு:
முன்னதாக பென்னாகரம் தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் உள்ளிட்டவற்றை விநியோகித்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம், மது, இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை ஆளுங்கட்சியினர் வழங்குவதாக பாமக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, முதல்வர், உள்துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்த அவர் நேற்று காலை 9 மணியளவில் அதை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அலுவலகம் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அதில் ஸ்ரீபதி விளக்கியுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications