டெபாசிட் இழப்பதையே வாடிக்கையாக்கிவிட்ட தேமுதிக!

சமீபத்திய அரசியல்வாதிகளில், படு வேகமாக அரசியல் ஏணியில் ஏறி வந்த ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே. அதில் யாருக்குமே எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் முதல்வர் பதவியைப் பிடித்து விட்ட மாதிரி நடந்து கொள்வது, அரசியலை சினிமா கேமரா என்று நினைத்துக் கொண்டு ஓவராக வசனம் பேசுவது அவரது வினையாகி நிற்கிறது.
முதுகில் மாறி மாறி குதிரை ஏறும் திமுக, அதிமுகவால் வெறுத்துப் போயிருந்த மக்கள் தேமுதிகவை உண்மையில் மக்கள் தங்களது சிறந்த மாற்றாக நினைத்திருந்தனர்.
அதன் பிரதிபலிப்பே கடந்த சட்டசபைத் தேர்தலிலும், பின்னர் லோக்சபா தேர்தலிலும் அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வகையில் செயல்படத் தவறி விட்டார் விஜயகாந்த்.
இதனால் தான் சமீபத்தில் இரு இடைத் தேர்தல்களில் தொடர்ந்து அந்தக் கட்சி மோசமான முறையில் டெபாசிட்டை இழந்தது. இப்போது மீண்டும் பென்னாகரத்தில் டெபாசிட் இழந்துள்ளது.
கடந்த தேர்தலில் பென்னாகரத்தில் தேமுதிகவுக்கு 3வது இடம் கிடைத்தது. ஆனால் இந்தத் தேர்தலில் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த முறை பென்னாகரத்தில், தேமுதிக வேட்பாளர் தனபாண்டி 10,567 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
தற்போதைய இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மன் 11,406 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அக்கட்சிக்கு ஆறுதலான விஷயம்தான். ஆனால் வழக்கம் போல இந்த முறையும் டெபாசிட் போய் விட்டது.
கடந்த முறை தேமுதிக பிடித்த இடத்தை இப்போது அதிமுக பிடித்துள்ளதையும், தங்களோடு சேர்ந்து அதிமுகவும் டெபாசிட்டை இழந்ததையும் தேமுதிகவினர் ஆறுதலாக நினைத்துக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு சுயேச்சை பெற வேண்டிய இடத்தை இந்த முறை தேமுதிக பிடித்திருப்பதையும் அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
வன்னியர் பெல்ட்டில் தானே தோற்றுள்ளோம் என்று தேமுதிக ஆறுதல் பட்டுக் கொள்ளவும் முடியாது. காரணம், விருத்தாச்சலம் என்ற வெண்கலக் கடைக்குள் புகுந்துதான் விஜயகாந்த் என்ற யானை பாமகவை அலறடித்தது என்பது வரலாறு. யாராலும் அவ்வளவு எளிதாக சாதிக்க முடியாத மிகப் பெரிய சாதனை அது.
விருத்தாச்சலத்தில் செய்ய முடிந்ததை ஏன் பென்னாகரத்தில் செய்ய முடியவில்லை? என்று தேமுதிகவினர் யோசிக்க வேண்டும்.
மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ளவாவது விஜயகாந்த் ஏதாவது செய்தாக வேண்டும். புதிய உத்திகளை யோசிக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்காக இன்னும் ஆழமாக போராட வேண்டும்.
இடையில் வரும் இடைத் தேர்தல்களில் வீணாகப் போட்டியிட்டு கட்சியினரை மேலும் மேலும் கடனாளியாக்குவதற்குப் பதில் அடுத்த பொதுத் தேர்தலில் புத்தெழுச்சியுடன் முன்னேற்றம் பெறத் தேவையான நடவடிக்கைகளில் அவர் இறங்கலாம்.
கூட்டணிக்காக நம்மைத் தேடி பெரிய கட்சிகள் வரும் என்று காத்திருக்காமல், விஜயகாந்த்தே புதிய பாதைக்கு முயற்சிக்க வேண்டும். மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை துல்லியமாக கணித்து அவர்களுடன் கூட்டணிக்கு முயல வேண்டும்.
இதையெல்லாம் செய்ய விஜயகாந்த்துக்கு பெரிய சிரமம் இருக்காது. அதுதான் கூடவே பண்ருட்டியார் இருக்கிறாரே.
மக்கள் நம்பிக்கையைத் தக்க வைக்கும் வகையில் எதையாவது செய்தால்தான் அடுத்த பொதுத் தேர்தலில் விஜயகாந்தாவது மீண்டும் வெல்ல முடியும்.
இல்லாவிட்டால் புதிய சட்டசபையில் தேமுதிக என்று ஒன்று இருக்காது.












Click it and Unblock the Notifications