நாட்டில் மீண்டும் புரட்சிகர திட்டங்கள் நிறைவேறும்- ப.சிதம்பரம்
சிவகங்கை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மூலம் மீண்டும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் நிறைவேற உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சுண்ணாம்பிருப்பில் புதிய சமுதாயத் கூடத்தை திறந்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மூலம் மீண்டும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம்.
அதில், உணவுக்கு உறுதி திட்டம், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு கிலோ ரூ 3 வீதம் மாதந் தோறும் 25 கிலோ அரிசி, அனைவருக்கும் கல்வி போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை அளிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு நிதி அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன். அதன் காரணமாக, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சமுதாயக் கூடம் கட்டும் திட்டம் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
நிறைகள் தான் எங்களது ஆட்சியில் அதிகமாக உள்ளது, இருப்பினும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் கூறுங்கள். அதையும் நிறைவேற்றி வைக்க தயாராக உள்ளோம்.
நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு 10 ம் வகுப்பு வரை கண்டிப்பாக இலவச கல்வி வழங்க உத்தேசித்து உள்ளோம். அதே போல் தி.மு.க.ஆட்சியில் கல்லூரி வரை கட்டணம் இல்லாத கல்வி, கரும்பு டன்னுக்கு ரூ.2ஆயிரம், திருமணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு என்று அடுக்கடுக்கான சாதனைகளை பட்டியலிட்டு சொல்லலாம் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications