பணியின்போது வீட்டுக்கு செல்ல முயன்ற 3 அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை
வேலூர்: பணியின்போது வீட்டுக்கு செல்ல முயன்று பிடிபட்ட மூன்று அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பணி நேரத்தில் இருப்பதில்லை என்ற புகார் உள்ளது.
சில மருத்துவர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் வந்திறங்கி, மருத்துவமனையில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, மீண்டும் பகல் 11.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு திரும்புவதை தினசரி வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரும், பொதுமக்களும் சேர்ந்து இந்த மருத்துவர்களை நேற்று முன்தினம் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எட்டு மருத்துவர்களில் 3 பேர் மட்டும் சிக்கினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னையில் இருந்து மருத்துவ கல்வி இயக்குனர் விநாயகம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வந்தார்.
பணியின்போது வீட்டுக்கு செல்ல முயன்ற அரசு டாக்டர்கள் அமர்நாத், தனலட்சுமி, ராமசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், டாக்டர்கள் 3 பேரும் பணியின்போது வீட்டுக்கு செல்ல முயன்றது உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
என்ன மாதிரியான நடவடிக்கையை எடுப்பது என்பதை அரசுதான் முடிவு செய்யும் என்று விநாயகம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications