கிஷன்ஜி காலில் குண்டுக்காயம் இருந்ததாக கூறுகிறார் பிடிபட்ட 'டாக்டர்'
கொல்கத்தா: மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜிக்கு காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டிருந்ததாகவும், அதை சரி செய்து அவரை அனுப்பி வைத்ததாகவும் போலீஸாரிடம் பிடிபட்ட ஒருவர் கூறியுள்ளார்.
அவரது பெயர் ஜவஹர்லால் மகதோ. தன்னைத் தானே டாக்டர் என்று அவர் கூறிக் கொள்கிறார். லால்கர் பகுதியைச் சேர்ந்தவர்.
3 நாட்களுக்கு முன்பு லால்கரில் வைத்து மகதோவை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். அவர் போலீஸாரிடம் கூறுகையில், கிஷன்ஜியின் இடது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் குண்டு உள்ளேயே தங்கி விடவில்லை. மாறாக, காலைத் துளைத்துக் கொண்டு வெளியேறி விட்டதால், பெரிய ஆபத்து ஏதும் இல்லை.
இதையடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்தி மருந்து போட்டு விட்டேன். தற்போது கிஷன்ஜி நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார் மகதோ.
இதுகுறித்து மேற்கு மிதினாப்பூர் எஸ்.பி. மனோஜ் குமார் வர்மா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அதேசமயம், பிடிபட்ட நபரின் பெயர் ஜவஹர்லால் மகதோ. தன்னைத் தானே டாக்டர் என்று கூறிக் கொள்கிறார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்று மட்டும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications