மேற்கு தொடர்ச்சி மலையில் மாவோயிஸ்ட் ஊடுருவலா? – போலீசார் சோதனை
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கியூ பிராஞ்ச் போலீசர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முதல் தேவிபட்டிணம் வரை மேற்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளான இப்பகுதியில் அடிக்கடி அதிரடி படை போலீசார் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
இங்கு ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களிலிருந்து ஊடுறுவியுள்ள மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள், சிறப்பு படை போலீசார் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 76 போலீசார் பலியானார்கள். இதனை தொடர்ந்து தமிழக டிஜிபி தமிழக-கேரள-ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை கண்காணிக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து புளியரை, தேனி, பாபநாசம், களக்காடு உள்ளிட்ட பல்வேறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கியூ பிராஞ்ச் போலீசார் வனப்பகுதிகளுக்கு சென்று ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியி்ல் சில மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், தாடியோடு பேண்ட், சட்டை அணிந்த நபர்கள் வனப்பகுதியில் நடமாடுவதாகவும், ஆடு, மாடு மேய்ப்பவர்களை கண்டதும் ஓடி ஓளிவதுமாக இருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து நேற்று மாலை முதல் உளவுத்துறை போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் புளியங்குடி வனப்பகுதியினுள் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் சென்ற பகுதியில் இந்தி பேசும் வடநாட்டவர்கள் சிலர் தங்கி இருப்பதை கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் பேசும் மொழி தெரியாததால் உளவுத்துறை போலீசார் அவர்களை வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர்.
புளியங்குடி வனப்பகுதியில் இருந்து கேரள மாநிலத்திற்கு எளிதாக சென்று விடலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மாவோயிஸ்ட்டுகள், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளை கடத்தலாம் என்றும் உளவு துறைக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தென்காசி நாடாளுமன்ற எம்பி லிங்கம் வாசுதேவநல்லூர் செண்பகவல்லி நீர்தேக்க பகுதிக்கு சென்று அணையில் உடைப்பு பகுதியை பார்வையிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
செண்பகவல்லி நீர்தேக்க பகுதிக்கு அரசியல் முக்கியத்துவம கிடைத்து வரும் நிலையில் முக்கிய புள்ளிகள் அப்பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதாலும், தற்போது மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் நிலையில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications