சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தக் கைதி தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் வாட்ச்மேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாகூர் மீரான் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3வது விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இன்று இந்த வழக்கில் நீதிபதி சேதுமாதவன் தீர்ப்பளித்தார். அப்போது நாகூர் மீரான் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஐந்து பேரையும் போலீஸார் வெளியில் அழைத்து வந்தார். அப்போது திடீரென நாகூர் மீரான் தன்னிடமிருந்த பிளேடை எடுத்து கழுத்தை கரகரவென அறுத்துள்ளார்.
இதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரிடமிருந்த பிளேடைப் பறித்தனர். அதற்குள் பெருமளவில் ரத்தம் வெளியேறி மயக்கமடைந்தார் நாகூர் மீரான்.
அவரை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மற்ற நான்கு கைதிகளும் பாதுகாப்புடன் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நாகூர் மீரான் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications