ரயில்களில் குடிநீர் வசதி இல்லை – கடும் வெயிலில் தாகத்தில் தவிக்கும் பயணிகள்
சென்னை: கடும் கோடை வெளுத்து வாங்கி வரும் நிலையில் ரயில்களில் பொதுப் பெட்டிகளில் குடிநீர் வசதியை செய்து தராமல் ரயில்வே மிகவும் அலட்சியமாக இருப்பதால் பயணிகள் வெயிலில் தாகத்தில் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கடும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கோடை விடுமுறை என்பதால் மக்கள் பல்வேறு ஊர்களுக்கும் போய் வந்தவண்ணம் உள்ளனர். சுற்றுலாவாக செல்வோரும், சொந்த ஊர்களுக்குச் செல்வோரும் நாடுவது ரயில்களைத்தான்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு ரயிலில் செல்வோர், குறிப்பாக பொதுப் பெட்டிகளில் செல்வோருக்கு குடிக்க தண்ணீர் வசதி செய்து தராமல் உள்ளது ரயில்வே நிர்வாகம். இதனால் மக்கள் வெயில் கொடுமையுடன், நா வறட்சியுடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வைகை, குருவாயூர், சென்னை- கோவை விரைவு ரயில், இன்டர்சிட்டி, வெஸ்ட் கோஸ்ட் உள்ளிட்ட பகல் நேர விரைவு ரயில்களில் சமையல் அறை பெட்டிகள் இணைக்கப்படும்.
இதன் மூலம், முதல் வகுப்பு, 2ம் வகுப்பு "சேர் கார்' பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குடிநீர் பாட்டில்களை ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர்களே நேரில் சென்று விற்பனை செய்கின்றனர்.
ஆனால், முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டிகளில் செல்லும் பயணிகள் நிலைமைதான் மிகப் பரிதாபமாக உள்ளது. சமையல் அறைப் பெட்டிகளில் இருந்து குடிநீர், சிற்றுண்டி ஆகியவற்றை ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர்கள், சாதாரண மக்கள் அதிகமாகப் பயணம் செய்யும் பொதுப் பெட்டிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை.
தற்போது சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சல்லும் ரயில்களில் தலா 2 அல்லது 3 முன்பதிவு செய்யாத பொதுப் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இவை செல்லும் வழித்தடத்தில், பெரும்பாலான ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட அளவுக்கும் மேல் அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்யாத பொது டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.
இதனால் ஏற்படும் நெரிசல் காரணமாக கழிப்பறைகள் அருகேயும், படிக்கட்டுகள் மீதும் நின்று கொண்டே பலர் பயணம் செய்கின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் குடிநீர் வாங்கக் கூட வெளியே வர இயலாமல், கூண்டில் அகப்பட்ட' நிலையில் பரிதவிக்கின்றனர்.
பொதுப் பெட்டிகளில் உள்ள பயணிகளுக்காவது பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக விநியோகிக்க ரயில்வே துறை முன்வர வேண்டும் என அப்பாவி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications