திறந்தவெளிப் பல்கலை பட்டம் பெற்றவர்களும் வக்கீலாகப் பணிபுரியலாம்! - உயர்நீதி மன்றம்
சென்னை: திறந்த வெளிப் பல்கலைக் கழகங்களில் பிஎல் பட்டம் பெற்றவர்களும் நீதிமன்றத்தில் வக்கீல் பணியாற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய சிலர் திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் என்று கூறி வெளியேற்றப்பட்டனர். தமிழ்நாடு பார்கவுன்சில் வகுத்த விதி முறைகளின் கீழ் இவர்கள் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் சீனிவாசராவ் உள்பட 20-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உயரக்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தனர். அதில், "திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எல். பட்டம் பெற்றுள்ளனர். டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அவர்களுக்கு பி.எல். பட்டம் வழங்கியுள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களது பட்டம் செல்லாது, அவர்களது வக்கீல் பதிவும் செல்லாது என்று கூறியது. இதனடிப்படையில் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது இந்திய பார் கவுன்சில் சட்டத்தை மீறியதாகும். எனவே மீண்டும் பதிவு செய்து வக்கீலாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த மனு நீதிபதிகள் ஆர். பானுமதி, சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மூத்த வக்கீல்கள் என்.ஆர். சந்திரன், சங்கர சுப்பு, விஜயேந்திரன் ஆகியோர் ஆஜராகி, "தற்போது வெளியேற்றப்பட்ட வக்கீல்கள் இந்திய பார் கவுன்சிலின் நிபந்தனைகள்படி இவர்கள் தகுதியானவர்களே. எனவே அவர்களை வக்கீலாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும்" என்று வாதடினார்கள்.
நீதிபதிகள் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் தங்களது தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:
"ஏற்கனவே தமிழ்நாடு பார் கவுன்சிலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் பதிவு செய்து பணியாற்ற இந்த நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதே தகுதிகளுடன் இனி வரக்கூடியவர்களுக்கும் பார் கவுன்சில் உரிய விதிமுறைகள் வகுத்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அவர்களை வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறோம்..." என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications