தமிழகம் முழுவதும் கடும் வெயில்- புதுக்கோட்டையில் 2 மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி

நாடு முழுவதும் மார்ச் மத்தியிலிருந்தே வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது. ஏப்ரல் மாதம் முதல் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது. 100 டிகிரியைத் தாண்டி 110 டிகிரி வரை வெயில் உக்கிரமாக உள்ளது. டெல்லியில் இன்று 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
உ.பி., ம.பி., பீகார் ஆகிய மாநிலங்களில் கடும் வெயில் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் கடும் வெயிலுக்கு 4 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவிலும், மத்தியப் பிரதேசத்திலும் கடும் வெயில் காரணமாக ஜூலை மாதம் வரை பள்ளிக்கூடங்களுக்கு அங்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
வேலூர்-சேலத்தில் தகிக்கும் வெயில்:
தமிழகத்திலும் வெயில் கடுமையாக உள்ளது. தலைநகர் சென்னையில் வானம் அவ்வப்போது மூடி மூடி வருவதால் வெயிலின் கொடுமை பெரிய அளவில் தெரியவில்லை. ஆனாலும் கடும் வெப்பமாக இருப்பதால் வீட்டுக்குள்ளும் இருக்க முடியாமல், வெளியிலும் போக முடியாமல் மக்கள் புழுங்கி வருகின்றனர்.
வேலூர், சேலத்தில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது.
மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் 100 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது.
புதுக்கோட்டையில் இன்று கடும் வெயில் அடித்து வந்த நிலையில் பிற்பகலில் சுமார் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications