லபாங் நீக்கப்படுகிறார் - மேகாலயா புதிய முதல்வராக முகுல் சங்மா தேர்வு
டெல்லி: நேற்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் திருப்பத்தில், மேகலாயா முதல்வர் பதவியிலிருந்து லபாங் அகற்றப்பட்டு புதிய முதல்வராக முகுல் சங்மா தேர்வாகியுள்ளார்.
மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வர் லபாங்குக்கும், துணை முதல்வர் முகுல் சங்மா உள்ளிட்டோருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இதை சரி செய்ய காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வந்தது. இந்த நிலையில் தற்போது துணை முதல்வராக உள்ள முகுல் சங்மா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சங்மா டெல்லி விரைந்து வந்தார். காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். ஏற்கனவே லபாங் டெல்லியில்தான் முகாமிட்டுள்ளார். சங்மாவுடன் 14 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் உடன் வந்தனர். இவர்களில் 11 பேர் லபாங் நீக்கப்பட வேண்டும் என கோரி வருபவர்கள் ஆவர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு சங்மாவின் வீட்டில் நடந்த கூட்டத்தில் மொத்தம் உள்ள 28 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 21 பேர் கலந்து கொண்டனர். இதனால் லபாங்கின் பதவி பறிபோவது உறுதியானது.
28 காங்கிரஸ் எம்.பிக்களில் வெறும் 6 பேருக்கு மட்டுமே லபாங் அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார். இதனால்தான் பிரச்சினை வெடித்தது.
தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்ததைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications