கிரிக்கெட் வாரியத்தை அரசே ஏற்க வேண்டும்-லாலு
டெல்லி: கிரிக்கெட்டை சூதாட்டாமாக மாற்றிவிட்ட ஐபிஎல் போட்டிகளையே ஒட்டு மொத்தமாக ரத்து செய்துவிட்டு, இந்திய கிரிக்கெட் வாரியத்தையே மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்தார்.
கொச்சி அணி விவகாரத்தில் வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் ராஜினாமா செய்துவிட்ட பின்னரும் இன்றும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், பெட்டிங், சூதாட்டம் என்று ஐபிஎல் அமைப்பு கிரிக்கெட் போட்டிகளையே அசிங்கப்படுத்திவிட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் துணை போகிறது.
இதனால் ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் போட்டிகளையே ரத்து செய்ய வேண்டும்.
கருப்புப் பணமும் ஊழலும் ஐபிஎல் போட்டிகளி்ல் புகுந்து விளையாடி வருகின்றன. கிரிக்கெட் அமைப்புகள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் எம்பி பிருந்தா காரத் கூறுகையில், இந்தப் போட்டிகளில் நடந்துள்ள ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தரூர் ராஜினாமாவோடு முடிந்துவிடும் பிரச்சனை அல்ல இது. இதில் முழு விசாரணை அவசியம் என்றார்.












Click it and Unblock the Notifications