வாகனங்களில் அதிக ஒலி ஹார்ன் பொருத்தினால் நடவடிக்கை: அமைச்சர்
சென்னை: வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்களை பொருத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாமகவைச் சேர்ந்த எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் பேசுகையில்,
வாகனங்களில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் ஒலி எழுப்பிகளை பயன்படுத்துகிறார்கள். இதனால் பொது மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டார்.
இதற்கு பதிலளி்த்த அமைச்சர் நேரு, வாகனங்களில் அதிக ஒலி ஏற்படுத்தும் ஒலி எழுப்பிகளை பயன்படுத்துவோர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்முறை அதிக ஒலி எழுப்பியை பயன்படுத்தினால் 100 ரூபாய் அபராதமும், 2வது முறை ரூ. 300 அபராதமும் விதிக்கப்படுகிறது. அதன் பிறகும் பிடிபட்டால் வாகன ஆய்வாளரும், போலீசாரும் இணைந்து கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.
தற்போது முதல்வர் 1,500 புதிய பஸ்களை வழங்கியுள்ளார். பஸ்கள் தனியாகவும் மற்ற வானங்களை தனியாகவும் செல்லும் வகையில் சாலைகளை மேம்படுத்த முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது. அவ்வாறு செய்தால் கடைகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் அதை செயல்படுத்த இயலவில்லை.
இந்தியாவிலேயே வாகனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. டெல்லியில் பஸ்களை கேஸ் மூலம் இயக்குவது போல் சென்னையிலும் கேஸ் மூலம் இயக்க வேண்டும் என்றால் மராட்டிய மாநிலத்தில் இருந்து பைப்லைன் மூலம் கேஸ் கொண்டு வரவேண்டும்.
இதற்கு ரூ. 3,500 கோடி செலவாகும். எனவே அதை இப்போது செயல்படுத்த இயலாது.
சென்னையில் ஆட்டோக்கள் அனைத்தையும் கேஸ் மூலம் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் சென்னையில் தற்போது கேஸ் நிரப்பும் நிலையங்கள் 18 மட்டுமே உள்ளன. எனவே இந்த முயற்சியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications