கிரிக்கெட் குண்டு வெடிப்பு-பெட்டிங் கும்பல் கைவரிசை?
பெங்களூர்: பெங்களூர் கிரிக்கெட் மைதான குண்டுவெடிப்பில் சூதாட்ட கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா நிருபர்களிடம் கூறுகையில்,
சின்னசாமி கிரிக்கெட் மைதான குண்டுவெடிப்பால், யாருக்கும் பெரிய அளவில் காயமில்லை. இருப்பினும் அரசு இதை மிக முக்கியப் பிரச்சனையாகக் கருதி விசாரணை நடத்தி வருகிறது.
குண்டுவெடிப்பு நடந்த மறுநாளும் மைதானத்தில் இருந்து இரு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகளால் பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்த முடியாது. உப்பு பொட்டலம், வெடிபொருள்கள், வயர்கள் ஆகியவை மைதானத்தின் வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதை வைத்து பார்க்கும்போது தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை.
இதுதொடர்பாக பெங்களூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டுவெடிப்பு குறித்து எத்தனை பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள் என்பதை இப்போது தெரிவிக்க இயலாது. சமயம் வரும்போது அதுபற்றி தகவல் தெரிவிக்கப்படும்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் அரை இறுதிப் போட்டிகளை திட்டமிட்டபடி பெங்களூரிலேயே நடத்த வேண்டும், வேறு நகரங்களுக்கு இடமாற்றம் செய்யத் தேவையில்லை என்று போலீஸ் தரப்பிலும், அரசுத் தரப்பிலும் போட்டி அமைப்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
போட்டிகளை அமைதியாக நடத்தி முடிக்க உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் போட்டி அமைப்பாளர்கள் அரை இறுதிப் போட்டிகளை மும்பைக்கு மாற்றியுள்ளனர்.
இது அவர்களது விருப்பம். இதில் அரசு தலையிட முடியாது.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததும், அரை இறுதிப் போட்டிகளுக்கு எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி கூறியதால்தான் அரை இறுதிப் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சங்கர் பிதரி எந்த சூழ்நிலையில் அப்படி சொன்னார் என்பதைப் பார்க்க வேண்டும்.
ஏப்ரல் 17ம் தேதி குண்டு வெடிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் கிரிக்கெட் மைதானத்தின் பாதுகாப்பு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. முன்பே ஒப்படைத்திருந்தால் தீவிர சோதனை நடத்தியிருக்க முடியும், பாதுகாப்பை அதிகரித்திருக்க முடியும் என்ற நோக்கத்தில் அவர் அவ்வாறு தெரிவித்திருக்கலாம். அப்போதைய சூழ்நிலை வேறு.
குண்டு வெடித்த பிறகு போட்டியை அமைதியாக நடத்தி முடிக்க போலீஸார் முழு பாதுகாப்பு அளித்தனர். பிறகு பொதுமக்கள் அமைதியாக போட்டியை பார்த்துவிட்டுச் சென்றனர். எனவே, போட்டி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு சங்கர் பிதரியின் பேட்டி காரணம் அல்ல.
இனி இதுபோல் எந்த அதிகாரியும் தனித்தனியாக பேட்டி அளிக்க மாட்டார்கள். அரசுத் தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் குறிப்பிட்ட நேரத்தில் பத்திரிகைகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும்.
குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை வைத்து சில கும்பல்கள் சூதாட்டம் நடத்தி வருகின்றன.
பெங்களூரில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் அரை இறுதிப் போட்டிகள் நடைபெறவிருந்தன. அந்தப் போட்டிகளை இடமாற்றம் செய்யும் நோக்கத்தோடு பெட்டிங் கும்பல் சதி செயலில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குண்டு வெடிப்பை நடத்தி, அதன் மூலம் மைதானத்தின் உள்ளே இருக்கும் ரசிகர்கள் பயந்து ஓடிவரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போகலாம். இதனால் போட்டி மும்பைக்கு மாற்றப்படலாம் என பெட்டிங் கும்பல் திட்டமிட்டிருக்கலாம் என்றார் ஆச்சார்யா.












Click it and Unblock the Notifications