மதிப்பெண் கூட்டலில் நடந்த தவறால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு லேப்டாப் வழங்க அரசுக்கு உத்தரவு
சென்னை: மதிப்பெண் கூட்டும்போது ஏற்பட்ட தவறால், அரசின் இலவச லேப்டாப் பெறுவதற்கான தகுதியை இழந்த மாணவருக்கு உடனடியாக லேப்டாப் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்டம் அய்யகரன்குளத்தை சேர்ந்த மாணவர் ஆர்.ரவீந்திரன் என்பவரின் தந்தை ராஜேந்திரபூபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
2009-ம் ஆண்டு 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு லேப்-டாப்' வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 500-க்கு 474 மொத்த மதிப்பெண்ணுக்கும் மேலாக மதிப்பெண்கள் பெற்றிருந்த 35 மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப்' வழங்கப்பட்டது.
அய்யகரன்குளத்தில் உள்ள இரா.நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த எனது மகன் கணக்கு பாடத்தில் 92 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தோம். அதை தொடர்ந்து கணக்கு பாடத்தில் அவனுக்கு 97 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
கூடுதலாக 5 மதிப்பெண் பெற்று மொத்தம் 478 மதிப்பெண்கள் கிடைத்ததையொட்டி, லேப்-டாப்' பெறும் திட்டத்தில் அதை பெறுவதற்கு எனது மகனும் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
எனவே, எனது மகனுக்கும், லேப்-டாப்' கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சர் சிறப்பு பிரிவு ஆகியோருக்கு மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மகனுக்கு லேப்-டாப் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார்,
கல்வியில் மிகச்சிறந்து விளங்கும் மாணவன் எந்தவொரு தவறையும் செய்யாத நிலையில் எப்படியெல்லாம் துன்பத்துக்கு ஆளாகிறான். மதிப்பெண் கூட்டலில் செய்யப்பட்ட தவறு இப்படிப்பட்ட இன்னலுக்கு அவனை ஆளாக்கியிருக்கிறது. அதுவும் கணக்கு பாடத்தில் போடப்பட்ட மதிப்பெண் கூட்டல் கணக்கு தவறாக போடப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
யாரோ செய்த தவறுக்கு இந்த மாணவனுக்கும், அவரது பெற்றோருக்கும் மனஉளைச்சலும், பண செலவும், வீண் அலைச்சலும் ஏற்பட்டுள்ளது. 10-ம் வகுப்பில் 96.5 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதையடுத்து அவர் ஒரு மிகச் சிறந்த மாணவர் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, இலவச லேப்-டாப் பெற்றுக்கொள்வதற்கு அவர் தகுதியுள்ள மாணவர்தான். மதிப்பெண் கூட்டலின்போது நடக்கும் தவறுகளாலும் மற்றும் கவனக்குறைவுகளாலும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற தவறுகள் உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரைப்படி மாணவர் ரவீந்திரனுக்கு இன்னும் 2 வாரத்துக்குள் இலவச லேப்-டாப் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.