தபால்காரரிடம் ரூ.90 ஆயிரம் அபேஸ் செய்த மூதாட்டி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி தபால் ஊழியரிடம் 90 ஆயிரம் அபேஸ் செய்த மூதாட்டி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் குருசாமி. ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது மகள் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக 90 ஆயிரத்துடன் தூத்துககுடிக்கு வந்தார்.
பழைய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது மூதாட்டி ஒருவர் குருசாமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குருசாமி வைத்திருந்த 90 ஆயிரத்தை எடுத்து கொண்டு மூதாட்டி தலைமறைவாகி விட்டார்.
பணம் திருட்டு போனதை அறி்ந்த அவர் அந்த மூதாட்டியை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. இதுகுறித்து மத்திய பாகம் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் குருசாமியிடம் 90 ஆயிரம் உங்களுக்கு எப்படி வந்தது, அதற்கு கணக்கு உள்ளதா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.
இதனால் மிரண்ட அவர் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் வேலை பார்த்து வரும் மகனிட்ம் நடந்த சம்பவத்தை கூறினார். மேலும் அந்த மூதாட்டியை பிடிப்பதற்காக தந்தை, மகன் இருவரும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மூதாட்டியின் அடையாளங்களை சொல்லி அவர் குறித்து துப்பு கிடைத்தால் தெரிவிக்கும்படி கூறினர்.
இந்த நிலையில் அங்குள்ள கடைக்காரர்கள் மூதாட்டியை மடக்கி பிடித்தனர். அதன்பிறகு அவரை மத்திய பாகம் போலீசில் ஓப்படைத்தனர். விசாரணையில் அந்த மூதாட்டி மேலமங்கலத்தை சேர்ந்த கோயில் பிள்ளை மனைவி காசியம்மாள் என்பதும் அவர்தான் பணத்தை திருடி சென்றிருப்பதும் தெரிய வந்தது. கொள்ளையடித்த ரூ.90 ஆயிரத்தில் 10 ஆயிரம் ரூபாயை செலவழித்து விட்டார்.
இதையடுத்து காசியம்மாளை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
கைதான காசியம்மாள் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு வயதானவர்களிடம் கவர்ச்சியாக பேச்சு கொடுத்து கைவரிசை காட்டுவது வழக்கம். அவரது வலையில் ஓய்வு பெற்ற தபால்காரர் குருசாமி சிக்கி விட்டார். போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகின.












Click it and Unblock the Notifications