3 நாட்களுக்கு ஒருமுறை அழகிரி விமானப் பயணம்!
டெல்லி: மத்திய அமைச்சரான பின் மூன்று நாட்களுக்கு ஒரு முறை விமானப் பயணம் செய்து கொண்டே இருக்கிறார் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரசாயனத் துறை அமைச்சகம் இந்தத் தகவலைத் தந்துள்ளது.
அவர் பதவியேற்ற முதல் 6 மாதத்தில் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே 61 முறை விமானத்தில் பறந்துள்ளார். 2009ம் ஆண்டு மே 29 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை உள்ளூர் விமானங்களில் 61 முறையில் சர்வதேச விமானங்களில் 6 முறையும் அவர் பயணம் செய்துள்ளார்.
இந்த பயணங்களுக்கான மொத்த கட்டண தொகை ரூ. 14.5 லட்சம் ஆகும் என்று ரசாயனத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், அழகிரி டெல்லியில் உள்ள தனது அமைச்சரக அலுவலகத்துக்கு எத்தனை நாள் வருகை தந்துள்ளார்?, அவர் கலந்து கொண்ட மத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் எத்தனை? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.
அமைச்சருடன் எத்தனை பேர் சென்றுள்ளனர். அவர் தனது பயணங்களின் போது தங்குவதற்கான செலவுகள் எவ்வளவு என்ற கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை.
அவர் அமைச்சரான பிறகு துறை ரீதியாக நடைபெறும் கூட்டங்களில் எத்தனை கூட்டங்களுக்கு அவர் தலைமை ஏற்று நடத்தி உள்ளார் என்ற கேள்விக்கும் பதில் தரப்படவில்லை.
இது குறித்து அழகிரியின் கருத்தை அறிய பிடிஐ நிறுவனம் முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
டெல்லியில் உள்ள அழகிரியின் வீட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, பதிலளிக்க யாரும் இல்லை.
அவர் தற்போது மாலத் தீவில் உள்ள நிலையில் செல்போனிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அமைச்சர் அழகிரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications