Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாலு, முலாயம், மாயாவதியை வளைக்க சிபிஐயை பயன்படுத்திய காங்.

Subscribe to Oneindia Tamil

Mayawati, Lalu Prasad Yadav and Mulayam Singh Yadav
டெல்லி: லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளை கைவிட்டும், மாயாவதிக்கு எதிரான சிபிஐ விசாரணையை நீர்த்துப் போகச் செய்தும், எதிர்க்கட்சிகளின் வெட்டுத்தீர்மானங்களுக்கு எதிராக அவர்களைத் திரும்பச் செய்து தான் தப்பித்துள்ளது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் வெட்டு தீர்மானங்கள் கொண்டு வர, பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் முடிவு செய்து இருந்தன.

இந்த பிரச்சினைகளுடன், அரசியல் தலைவர்களின் டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம், ஐ.பி.எல். சர்ச்சையும் சேர்ந்து கொண்டதால், பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடந்த சில நாட்களாக அமளி நிலவியது.

மத்திய அரசுக்கு எதிரான இந்த பிரச்சினைகளில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்ததால், வெட்டு தீர்மானங்களினால் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் நிலை உருவானது.

இந்த நிலையில், 21 எம்.பி.க்களைக் கொண்ட மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி, வெட்டு தீர்மானத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நேற்று காலை அறிவித்தது. இதனால், அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்குவது உறுதியானது.

அதேபோல முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகியவை பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று கூறி வெளிநடப்பு செய்தன.

நேற்று மாலை 6 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியதும், நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக, பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் வெட்டு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. பா.ஜனதா கொண்டு வந்த வெட்டு தீர்மானங்கள் மீது, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் பேசினார்கள்.

விலைவாசி உயர்வு பிரச்சினையில் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வந்த அவர்கள் இருவரும், ஓட்டெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பா.ஜனதா கொண்டு வந்துள்ள வெட்டு தீர்மானத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்று அவர்கள் அறிவித்தனர். இதனால், ஓட்டெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறுவது உறுதியானது.

அதைத் தொடர்ந்து பா.ஜனதா கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தின் மீது மின்னணு எந்திர ஓட்டெடுப்பு நடைபெற்றது.

சபையில் இருந்த 410 உறுப்பினர்களில், வெட்டு தீர்மானத்துக்கு எதிராக 246 பேரும், ஆதரவாக 162 பேரும் ஓட்டளித்தனர். 2 பேர் ஓட்டு போடவில்லை.

இதனால், 84 ஓட்டு வித்தியாசத்தில், பாஜக கொண்டு வந்த வெட்டு தீர்மானம் தோல்வி அடைந்து, மத்திய அரசு வெற்றி பெற்றது.

அடுத்து இடதுசாரி கட்சிகள் சார்பில், குருதாஸ்தாஸ் குப்தா கொண்டு வந்த வெட்டு தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. உறுப்பினர்கள் பட்டன்களை அழுத்தியதும், எந்திரத்தில் ஏற்பட்ட குளறுபடியால் போர்டில் எந்தவித எண்களும் தெரியவில்லை.

இதனால் துண்டுச் சீட்டுகள் மூலம் ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில், 88 ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் தோல்வியை தழுவியது. தீர்மானத்துக்கு எதிராக 289 ஓட்டுகளும், தீர்மானத்துக்கு ஆதரவாக 201 ஓட்டுகளும் கிடைத்தன.

அரசுக்கு எதிரான வெட்டு தீர்மானங்கள், விவாதம் எதுவுமின்றி ஓட்டுடெடுப்புக்கு விடப்பட்டது, பாராளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

நேற்று காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட ஒரு மினி புரட்சியையே நடத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை தன் பக்கம் படு சாமர்த்தியமாக அது திருப்பி விட்டது.

இதற்காக அது கையில் எடுத்த அஸ்திரம் சிபிஐ. மாயாவதிக்கு எதிரான சிபிஐ வழக்கில், தற்போது மந்த நிலையை எடுத்துள்ளது சிபிஐ. அதாவது உ.பியில் சிலைகள் அமைப்பு, அம்பேத்கர் நினைவிடம் உள்ளிட்டவை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் மிதமான நிலையை சிபிஐ எடுத்துள்ளது. அதேபோல அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலும் நீக்குப் போக்காக நடந்து கொள்ளுமாறு சிபிஐக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால்தான் அரசுக்கு ஆதரவாக திரும்பியுள்ளார் மாயாவதி.

இதேபோல லாலு மற்றும் முலாயம் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை கைவிட்டுள்ளது சிபிஐ. இதையடுத்து இருவரும் காங்கிரஸுக்கு சாதகமாக நடந்து கொண்டு வெட்டுத் தீர்மான தாக்குதலிலிருந்து அரசைக் காத்துள்ளனர்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்-டைட்லரை காத்த சிபிஐ:

இந் நிலையில் 1984ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் (66) குற்றமற்றவர் என்று டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 1984ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் மூண்டது.

இந்த கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெகதீஷ் டைட்லரை விடுவிக்க அனுமதி அளிக்கும்படி, டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கோரி இருந்தது.

மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் பெருநகர நடுவர் மன்ற நீதிபதி ராகேஷ்பண்டிட், சி.பி.ஐ. மனுவை ஏற்றுக்கொண்டு ஜெகதீஷ் டைட்லரை வழக்கில் இருந்து விடுவிக்க ஆட்சேபம் இல்லை என்றும், வழக்கை முடித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார்.

கலவரத்தை நேரில் பார்த்த இரு சாட்சியங்களும் தவறாகவும், ஜோடிக்கப்பட்டவையாகவும் இருப்பதால், ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை என்பது தெளிவாகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+