ஸ்பெக்ட்ரம் விவகாரம்-அதிமுக ரகளை: பொறுமையிழந்த பிரணாப்
டெல்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு நிதி மசோதா நிறைவேற்றிய பின்னர் மத்திய அரசு பதிலளிக்கும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவையில் நிதி மசோதா தொடர்பான விளக்கங்களை பிரணாப் அளித்துக் கொண்டிருந்தபோது அதிமுக, பாஜக எம்பிக்கள் 2-ஜி ஒதுக்கீடு விவகாரம், தலைவர்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம், ஐபிஎல் ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளைக் கிளப்பினர்.
அதிமுக எம்பிக்கள் சபாநாயகரின் இருக்கையை முன் கூடி முற்றுகையிட்டனர். பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்த அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந் நிலையில் தனது பொறுமையை இழந்த பிரணாப் முகர்ஜி, 543 உறுப்பினர்கள் அடங்கிய இந்த அவையை 10 பேர் (அதிமுக எம்பிக்கள் 9 பேரை குறிப்பிட்டு) மட்டும் கட்டுப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
உங்களது செயல் பயங்கர எரிச்சலூட்டுகிறது. உடனே நீங்கள் உங்கள் இருக்கைகளுக்குச் செல்லுங்கள்.
நிதி மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்கும். அவையை விட்டு நான் ஓடி விடமாட்டேன், நிச்சயம் பதிலளிப்பேன். நானோ அல்லது பிரதமரோ நிச்சயம் பதில் அளிப்போம் என்று கோபமாகக் கூறினார்.
அதே நேரத்தில் 2-ஜி ஒதுக்கீடு தொடர்பாக விவாதம் நடத்தப்படுமா என்று எதிர்க் கட்சியினர் கோரியதற்கு, அது தொடர்பாக எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது. இது தொடர்பாக வெளியான பத்திரிகை செய்திகளை ஆராய்ந்துவிட்டு முடிவு செய்யப்படும் என்றார்.