நர்சிங் விடுதியில் மாணவியை கட்டிப் போட்டு தாக்கிய கொள்ளையன்
சென்னை: நர்சிங் மாணவிகள் விடுதியில் புகுந்த கொள்ளையன் மாணவியை கட்டிப் போட்டுவிட்டு தாக்கியதையடுத்து மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் ரோட்டில் உள்ள ஜே.வி. நர்சிங் கல்லூரியில் 68 மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
இவர்கள் தங்குவதற்கு மாடியில் அறைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கொள்ளையன் ஒருவர் இங்கே புகுந்தான். சத்தம் கேட்டு அமலா என்ற எழுந்தார்.
இதைப் பார்த்த கொள்ளையன் அமலா சுதாரிப்பதற்குள் அவரது வாயில் துணியை அடைத்து கட்டிவிட்டு, கை-கால்களை கட்டிப் போட்ட அந்த வகொள்ளையன் அவரை சரமாரியாக தாக்கினான். இதில் அமலா மயங்கி விழுந்தார்.
இதையடு்த்து கொள்ளையன் தப்பியோடி விட்டான். அமலாவின் முனகல் சத்தத்தை கேட்டு எழுந்த சக மாணவிகள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விடுதி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். திடீரென கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே பூந்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கோஷமிட்டனர்.
கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் சாரங்கன் விரைந்து வந்து அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகள் மறியலை கைவிட மறுத்ததால் பெண் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதனால் பூந்தமல்லி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலின்போது ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.