எனது போன் 4 வருடமாக ஒட்டுக் கேட்பு- மமதா புகார்
வரும் 30ம் தேதி மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையே பெரும் மோதல் வெடித்து கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
இந் நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய மம்தா, தொலைபேசி ஒட்டுக் கேட்பு என்பது புதிய விஷயமில்ல. எனது போனைக் கூடத்தான் நான்கு வருடங்களாக ஒட்டுக் கேட்டு வருகின்றனர். நானும் இதைக் கூறிக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் இதை யாருமே காது கொடுத்துக்கூட கேட்பதில்லை. ஆனால் போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக டெல்லியில் வைத்து யாராவது கூறினால்அதை பெரிதாக்கி அமளியாக்கி விடுகிறார்கள்.
மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சியல்ல என்பதை அந்தக் கட்சித் தலைவர்கள் உணர வேண்டும். அது ஒரு கூட்டணி அரசு. அதை மறப்பது காங்கிரசுக்கு நல்லதல்ல என்றார் மமதா.
முன்னதாக திரினமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முகுல் ராய் கூறுகையில், மமதாவின் லேன்ட்லைன் மற்றும் செல்போன்கள் தொடர்ந்து ஒட்டுக்கேட்கப்பட்டு வருகிறது. இதை செய்வது மேற்கு வங்க மாநிலத்தின் இடதுசாரி அரசு என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.