கேபிள் டிவி நிறுவனம் மூலம் மோசடி – ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கைது
கோவை: உரிமம் இல்லாமல் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி மோசடி செய்த ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
கோவை கணபதி போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் அண்ணாதுரை (60). இவர் கோவை ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் தனியார் நிறுவனங்களின் டி.டி.எச். ஆண்டனாவை வீட்டில் வாங்கி வைத்து அதன் மூலம் காவலர் குடியிருப்பு மற்றும் சேரன்மாநகர் பகுதிகளில் உள்ள சுமார் 200 வீடுகளுக்கு கேபிள் மூலம் அனுமதி இல்லாமல் சேனல்களை ஒளிபரப்பினார். இதற்காக மாதம் ரூ.50 மட்டுமே வசூல் செய்தார்.
கடந்த 1 வருடத்திற்கும் மேலாக இந்த கேபிள் நிறுவனத்தை அவர் நடத்தி வந்துள்ளார். மாத கட்டணம் ரூ.50 என்பதால் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் ஏற்கனவே இருந்த கேபிள் இணைப்பை துண்டித்து விட்டு இவரிடம் இணைப்பை பெற்றனர். இதனால் அந்த பகுதியில் உரிமம் பெற்று கேபிள் நடத்தி வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கேபிள் நிறுவன மேலாளர் ராஜேஷ் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் சுரேஷ், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய குமார் ஆகியோர் போலி கேபிள் நிறுவனம் நடத்தும் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்து தனியார் நிறுவன டி.டி.எச். ஆண்டனா செட்டப்பாக்சை பறிமுதல் செய்தனர். மேலும் எந்த உரிமமும் பெறாமல் டி.டி.எச். மூலம் வீடுகளுக்கு கேபிள் வழங்கி மோசடி செய்ததாக முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, அவரது மகன் ஸ்ரீராம், உதவியாளர் குமரேசன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்












Click it and Unblock the Notifications